Wednesday, January 27, 2010

கீரை, காய்கறிக்கு ரசாயன மருந்து : கடும் பாதிப்பு அபாயம்

ரசாயன மருந்து தெளித்த சில மணி நேரத் தில், அறுவடை செய்யப் பட்ட காய், கீரைகள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


உடல் ஆரோக்கியத்திற்கான சைவ உணவுகளில், காய்கறி, கீரைகள் முக்கியமானவை. இவைகளை கொண்டு, பொரியல், அவியல், காய்கறி கூட்டு, சாம்பார் உள் ளிட்டவை செய்யப்படுகின்றன. உடலில் சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர், நாள்தோறும் காய்கறி, கீரை சாப்பிடவேண்டும் என, டாக்டர் கள் அறிவுறுத்துகின்றனர். தற்போது காய்கறிகள், கீரைகள் விளைவிக்க, அதிக அளவில் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த சில மணி நேரத் தில், காய்கறிகள், கீரைகள் விற்பனைக்கு வருகின்றன. கத்தரிக்காய், தக்காளி, வெண்டை, காலிப்ளவர், அவரைக்காய் போன்ற காய்களின் உள்ளே புகுந்து விடும் புழுக்களை கொல்ல, வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.


காய்கள், கீரைகள் நாள்தோறும் அறுவடை செய்ய வேண்டும்; இல்லையெனில், அவை முதிர்ந்து விடும். எனவே, காய்கள் மற்றும் கீரைகளிலுள்ள ரசாயன மருந்தின் மணம் மாறாத நிலையில், அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகின்றன. அதை வாங்கி சமைக்கப் படும் நிலையில், மருந்தின் வீரியம் குறையாமல் உட் கொள்ளப்படுகின்றன. தண்டு கீரை, சிறு கீரை, அரை கீரை, புதினா, கொத்தமல்லி, மணத்தக் காளி உள்ளிட்ட கீரைகள் செழித்து வளர, அளவுக்கு அதிகமான வகையில் யூரியா போடப்படுகிறது; கீரைகளின் தண்டு பகுதி, இலை பகுதியை பூச்சி, புழுக்கள் சேதபடுத்தாமல் இருக்க, வீரியமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந் துகள் தெளிக்கப்படுகின் றன. பூச்சிக்கொல்லி மருந் தின் மணம் வீசும் காய் மற்றும் கீரைகள் சாப்பிடுவதால், குடல் புண், வாயு தொல்லை, மூலம், மலச்சிக்கல் போன்ற தொந் தரவுகள் ஏற்பட்டுள்ளன.


தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: வீரியம் குறைந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அடித்தால், தற்போது இருக்கும் புழு, பூச்சிகள் இறப்பதில்லை. காய் மற்றும் கீரைகளுக்கு அதிக திறன் கொண்ட ரசாயன மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்த மூன்று தினங்கள் கழித்து, காய் மற்றும் கீரைகள் அறுவடை செய்ய வேண்டும். தற்போது, மருந்து அடிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்ற, விற்பனைக்கு வரும் காய் மற்றும் கீரைகள் தர பரிசோதனை செய்து விற்க அனுமதிக்க வேண்டும். அதற்கு உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், தர பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அலுவலர் கூறினார்.

readers comments

வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி ரசாயன மருந்துகளை உபயோகப்படுத்துவதால்
மூலம், மலச்சிக்கல், கான்செர் போன்ற வியாதிகள் வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. பல ஐரோப்பிய நாடுகளில் இப்படித்தான் பலதரப்பட்ட பிரச்சினைகள்; அதன் பிறகு அவர்கள் விதவிதமான கெமிகல் மருந்து மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு இருக்கிறாகள்! இந்தியாவுக்கும் இந்த நிலைமை வேண்டாமே!! ப்ளீஸ் இதை இந்திய மதிய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்!!!!

by L Kavirichelvi,Crete,Greece

மிகவும் கொடுமை இது. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. எந்த வித கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை.
தர பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் மனசாட்சியுள்ள ல்ஞ்சத்திற்கு மயங்காத நல்ல ஆய்வக அலுவலர்கள் பணிபுரியவேண்டும்.

by K JEEVITHAN,villupuram,India

பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.
-----------------------------
விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்களை பதப்படுத்தி, பக்குவப்படுத்தி தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனாலேயே செயற்கை உரங்களை நம்மூர் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இவற்றால் வயல்களுக்கும், பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
------------------------------------
யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், பசுவின் சாணத்தை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை எந்தவித பாதிப்பும் இல்லாத நெல், அரிசி கிடைக்கும். இதனை உட்கொண்டால் சர்க்கரை வியாதி உள்ளிட்ட இதர வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.
by தில்லாலங்கடி,தில்லையாடி,India

அவசியமான கட்டுரை.இதிலிருந்து மக்கள் தான் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.எந்த ஒரு கெட்ட வழக்கமும் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது மிகவும் கொடுமை. விற்பனைக்கு வரும் காய் மற்றும் கீரைகளை தர பரிசோதனை செய்ய உழவர் சந்தை, காய்கறி சந்தை ஆகிய இடங்களில், தர பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் மனசாட்சியுள்ள ல்ஞ்சத்திற்கு மயங்காத நல்ல ஆய்வக அலுவலர்கள் பணிபுரியவேண்டும்.
by துரை.செல்வராஜு,,Thanjavur,India

எல்லா கீரை, காய்கறிகள், தோலுடன் சாப்பிடும் பழ வகைகள் ஆகியவற்றை தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்தோ கழுவியோ சமைப்பது தான் நம்மை காத்துக் கொள்ளும் வழி. இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு சீக்கிரம் மாறுகிறோமோ அவ்வளவு நல்லது, நமது சிறார்களுக்கு. குறுகி வரும் விளை நிலங்களும், உரிய விலை கிடைக்காத விவசாயமும், சுரணையே இல்லாத அரசும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
by N.S Sankaran,Chennai,India

தற்போது உணவுக்குழாய் சார்ந்த புற்று நோய் வர இவ்வனைத்தும் காரணமாக இருக்கலாம். ஆச்சரியப்படகூடிய உண்மை என்னவென்றால் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எந்த ஒரு கெட்ட வழக்கமும் இல்லாதவர்கள். ஆகவே, தகுந்த விழிப்புணர்வை அரசும் மற்ற சார்பற்ற நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும்.
by R சுந்தர்,QATAR,Qatar \

thanks to dinamalar

பி.டி.கத்தரிக்காய்க்கு தடை:தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் பி.டி.கத்தரிக்காயை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்டு பயிரிடப்படும் பயிர்களினால் உடல் நலக்கோளாறு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும், வேளாண் நிலங்கள் பாதிக்கும் ஆபத்தினால் விவசாய நிலங்களும், விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட பி.டி.ரக கத்தரிக்காய் உற்பத்திக்கும்,விற்பனைக்கும் தடைவிதிக்கவேண்டும், பிற மரபணுமாற்றப்பட்ட பயிர்களை விவசாயம் செய்யவும் தடை விதிக்கவேண்டும் என்று விவசாயிகள்,வேளாண்மை அமைப்புகள்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், நடிகை ரோகினி உள்ளிட்ட அவ்வமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு அளித்தனர்.

மரபணு காய்களினால் ஏற்படும் ஆபத்து குறித்து விரிவாக எடுத்துரைந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … ''முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு பெண்கள் இணைப்புக் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றுதெரிவித்தார்.மேலும் எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரை இதை விற்கவோ பயிரிடவோஅனுமதிக்கக் கூடாது.'' என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 14, 2010

பி.டி., கத்தரிக்காய் பயிரிட்டால் 200க்கும் மேற்பட்ட செடிகள் அழியும் : நம்மாழ்வார் எச்சரிக்கை

""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.கோவை வேளாண் பல்கலை மற்றும் அமெரிக்கா விதை நிறுவனமான மான்சான்டோவின் இந்திய பங்குதாரர் "மஹிகோ' நிறுவனமும் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் செய்த பி.டி., கத்தரிக்காயை உற்பத்தி செய்துள்ளது.


பி.டி.,கத்தரிக்காய்க்கு, இந்திய உயர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு, மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறி உற்பத்தியை பெருக்குவதற்காக, தட்ப வெப்ப நிலைக்கு தாக்கு பிடித்து, அதிக அளவில் காய்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பி.டி., கத்தரியை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளின் கருத்து கேட்க, மத்திய அரசு இம்மாதம் நாடு முழுவதும் ஆறு மாநில தலைநகரங்களில் கூட்டம் நடத்தவுள்ளது.


பி.டி., கத்தரி தொடர்பாக அகில இந்திய இயற்கை உழவர் இயக்க தலைவரும், இயற்கை விஞ்ஞானியுமான நம்மாழ்வார் கூறியதாவது:விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் பி.டி., கத்தரி சாகுபடி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழகத்தில் பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், விவசாயிகளிடம் நேரில் சென்று பி.டி., கத்தரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.தற்போது பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்கினால், படிப்படியாக, அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விடும். பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.


தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.


எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.

thanks to dinamalar