Tuesday, December 20, 2011

வீணாவது நமது வரிப்பணம்!

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் தனித்துவமான அடையாள எண் (ஆதார்) அளிக்க வகை செய்யும் தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை அதன் தற்போதைய வடிவில் ஏற்க இயலாது என பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு நிராகரித்துவிட்டது. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இந்தக் குழுவின் இந்த முடிவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பின்னடைவு.  

தேசிய அளவிலான எந்தவொரு திட்டமானாலும் நாடாளுமன்றத்தில் அதுதொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்பூர்வ அதிகாரம் கிடைத்த பிறகே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆதார் அடையாள எண் விஷயத்தில் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல், நிர்வாக அதிகாரத்தின் மூலம் கடந்த ஆண்டு, செப்டம்பரிலேயே நந்தன் நிலகேணி தலைமையிலான இதற்கான தேசிய ஆணையம் தனது பணிகளைத் தொடங்கிவிட்டது.

 இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்துவமான அடையாள எண் வழங்குவதுதான் ஆதார் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இத்தகைய அடையாள எண் வழங்கப்படும். குடும்ப அட்டை, செல்போன் இணைப்பு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை ஓர் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.  

ஆதார் தேசிய அடையாள எண் பெறுவதற்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிம அட்டை உள்ளிட்ட முகவரிச் சான்று ஆவணம் ஏதாவது ஒன்றைக் காண்பித்து, அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பதிவு மையத்தில் (அஞ்சல் நிலையம், வங்கி உள்ளிட்டவை) முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரரின் விரல் ரேகை, கருவிழி ஆகியவை கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு அவருக்கு தனித்துவமான தேசிய அடையாள எண் வழங்கப்படும்.  எந்தவொரு திட்டமானாலும் அது நடைமுறைச் சாத்தியமா என்பது குறித்து குழு அமைத்து தீவிரமாக கள ஆய்வு செய்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 120 கோடி பேருக்கும் இந்தத் தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, இத்தகைய கள ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது முதல் கோணல். இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் திட்ட மதிப்பீடு எதுவும் தயாரிக்கப்படவில்லை. 

இது இரண்டாவது சறுக்கல்.  தொடக்கமே முறையாக இல்லாத இந்தத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் வழங்குவதற்காக ரூ. 3,170 கோடியை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. 120 கோடிப் பேருக்கும் அடையாள எண் வழங்குவதற்கு உத்தேசமாக ரூ. 72,000 கோடி தேவைப்படலாம் என சுயேச்சையான மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்கெனவே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இதே பாணியில் அடையாள எண் வழங்குவதற்காகத் தகவல்களைப் பதிவு செய்வதும், அதற்காக பெரும் தொகையைச் செலவிடுவதும் தேவைதானா என மத்திய நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல, தேசிய அடையாள எண் திட்டமானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகமும் தனது பங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இரு முக்கிய அமைச்சகங்களின் எதிர்ப்பையும் மீறி, அவசரகதியில் ஆதார் திட்டத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.  

தேசிய அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு முகவரிச் சான்று எதுவும் இல்லாவிட்டாலும், ஏற்கெனவே இதைப் பெற்றுள்ள மற்றொருவர் அறிமுகப்படுத்தினாலே போதும் என்ற விதியால், சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களும் இந்த எண்ணை எளிதாகப் பெற்றுவிட முடியும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பது உள்துறை அமைச்சகத்தின் நியாயமான வாதம். 

 மேலும், இந்த அடையாள எண்ணைப் பெறுவதற்காக பொதுமக்கள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்புச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை. இதுவும் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 

 அதோடு, இந்த அடையாள எண்ணுக்காக பொதுமக்களின் விரல் ரேகை, கருவிழி (பயோமெட்ரிக்) போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. விரல் ரேகை சேகரிப்பில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.  வளர்ச்சியடைந்த நாடான பிரிட்டனில் இதேபோன்று தேசிய அடையாள எண் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டத்தை பிரிட்டன் பாதியிலேயே கைவிட்டுவிட்டது. 

மக்கள்தொகை குறைவாக உள்ள பிரிட்டனிலேயே இந்த நிலைமை என்றால், உலகிலேயே அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் இந்தத் திட்டத்தை எப்படி முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்பதை மத்திய அரசு ஏன் சிந்திக்கவில்லை?  தற்போது தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவே நிராகரித்துவிட்டது. மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது? அப்படியானால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, ஏற்கெனவே இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3,170 கோடி விழலுக்கு இறைத்த நீர்தானா? இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை=உணவுப் பாதுகாப்பு மசோதா

உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. 

 உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.  ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன.


இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.  அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.  முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். 

இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.  ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது.

இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.  மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. 

அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப்போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.  

கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. 

 இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.  

வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். 

சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர். 

 வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.  மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து.

இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? 

பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?  மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!

 விலை நிலங்கள் வீட்டுமனைகளாகி வருகின்ற வேகத்தை பார்த்தால் இந்தியா முழுவதும்விவசாயம் செய்யும் நிலங்களின் மொத்த கணக்கு சரிதானா?என்பது கேள்விக்குரியதாக உள்ளது.தரிசு நிலங்கள் விளை நிலங்கலாகவேண்டும்.விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க தடை விதிக்கவேண்டும்.இலவசங்களை மறு பரிசீலனை செய்தால்தான் பொருளாதாரம் மேம்படும்.

  இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.அதாவது இந்த்ததிட்டமானது ஏழைகளுக்கு கொடுப்பதுபோல் கொடுத்து வாக்குகளையும் வாங்கிக்கொண்டு மக்களை எமாடுவதொடு தொளிலதிபர்க்ளளையும் கைக்குள் போட்டு தேர்தல் செலவுக்கும் பணம் வாங்கவே இந்தத்திட்டம்

Tuesday, November 15, 2011

யோகி ராம்சுரத்குமார் - என் அப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறார்..!

மகான் யோகி ராம் சுரத்குமாரைப் பற்றிய அறிமுகம் , நமது வாசகர்களுக்கு தேவைப் படாது என்று நினைக்கிறேன். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் , தனது குருவைப் பற்றி எழுதிய ஒரு சிறிய கட்டுரையை , நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

படிக்கும்போதே சில வரிகளில் உங்களுக்கு , சில உயர்ந்த விஷயங்கள் புரிபடும்... படித்துப் பாருங்கள்...!




திருவண்ணாமலை வந்த காசி மகான்!
கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு. பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதைக் கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.
விளைவு- மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று பின்னால் பெயர் வந்தது.


இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம், ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளை நிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே, உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது.ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப் படுத்தினர்.

அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க… ‘இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி- விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்’ என்றார்.

காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். எத்தனை மகான்கள் தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனித மான இடம்… அவருக்கு மெய்சிலிர்த்தது.

இந்தப் புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவ லிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது.
இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அது’வே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது. இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.

இது என்ன… இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்… இந்தத் தவிப்பு… இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே… இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே. அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ..? உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறுவிதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியாமல் போனது.
மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப் படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்குக் கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது.

அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும் மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தைக் கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும்; உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இதுதான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்- தந்தை. ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார். பள்ளிக்கூடம் சரியாகும் வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.
நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்றுகூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.

பள்ளிக்கூடம் நடக்கத் துவங் கியது. சிறிய வருமானம்; ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்… அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை… பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீஅரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும் பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.

என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா… அரவிந்தரை நோக்கிப் போவதா… மௌனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ..?
தயங்கினார்; குழம்பினார்.

எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார்.
ஆசிரியர் அவரை மாணவர் களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். மாணவர்கள் காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.
யார் கையேந்திக் கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது.

கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது…

ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! இவரே என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச் சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.
ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போக முடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப் பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே… என்று கவலைப்பட்டார்.
அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். ”இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.

உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும்புலப்பட வில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமான வராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.

உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடி களில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.

உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயத மான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.

தங்க நாணய மயமான சிரிப்பு… தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும், திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.

புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்துவிட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார்.

பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.

இது எப்படி சாத்தியம்..? கேட்டார்கள். ”இந்தப் பெயரைச் சொன்னால் போதும்… எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.
அவர் கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி. உணவு வாங்க ஒரு கொட்டாங்கச்சி. கையிலே சிறு கோல். இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது ”கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயரை எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார்” என்பார்.

இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.
கணவன் – மனைவிக்குள் சண்டை! மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார்! ‘ரொம்ப நல்லது. செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று, ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன்.

அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.
என்னாயிற்று..? எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி…

”பகவான்… உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்தேன். வேலை செய்யவில்லை. மாறாக, என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்து விடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார்- உங்களுடைய பக்தராக!” என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு சௌக்கியமாக வாழ்ந்தது.

பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்… வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்… அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது, ‘வந்தே மாதரம்’ என்றும், ‘பாரத் மாதா கி ஜேய்’ என்றும், ‘ராம ராம ராம’ என்றும், ‘ஓம் ஸ்ரீராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.

ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, ‘யோகி ராம்சுரத்குமாரை தரிசித்துவிட்டுப் போகலாம்’ என்று வந்தார். தான் திருப்பதிக்குப் போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்குப் போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் ‘சரி’யென்று சொல்லி, ”வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்தப் பிச்சைக்காரன் யார்’ என்பதைக் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்டது ஞாபகம் வந்தது.

”பெருமாளே… திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?” என்று உரக்க வினவினார்.
”நேனே” என்று கருவறையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாகப் புரிந்தது.

இந்தக் கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது… தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்துபோய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு…
அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான். அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக்கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.

வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து, வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.

மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, ”யோக்யதை இருந்தால் கூப்பிடுங்கள். எனக்கு யோக்யதை இருந்தால் பேசுங்கள். எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்தக் கதவு திறந்தது.

‘உனக்கு என்ன வேண்டும்..?’
‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. எனக்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக!


அவர் பதறினார். ‘இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா!’ என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார்.
எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது.

வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுகோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துகள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது. உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.

ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளளியைப் பெருக்கி, இறை தரிசனமும் காட்டினார்.
யோகி ராம்சுரத்குமார்… 20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலுமுள்ள பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை செங்கம் ரோடில் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

‘யோகி ராம்சுரத்குமார்! யோகி ராம்சுரத்குமார்! யோகி ராம்சுரத்குமார் என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்னை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்’ என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்!

Wednesday, November 9, 2011

சர்க்கரை நோய்--இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது

புதிய மருத்துவ வணிகத்துக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது சர்க்கரை நோய்! 

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 220 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.

இவர்களில் 50.8 மில்லியன் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எடுத்த மாதிரிச் சான்றுகள் அடிப்படையில் மொத்த மக்கள்தொகைக்கும் பொருத்திப் பார்க்கும் முறையைக் கொண்டவை. இதில் மிகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது. அதற்காக இவை முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. 

இந்தியா என்றாலே மக்கள் தொகை அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற விஷயமாக இருக்கின்றது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது உண்மை. 

இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. மனஅழுத்தமும், மனச்சோர்வும் நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன. 

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவமனைகள் வரிந்துகட்டி நிற்கும் அதேநேரத்தில், வெளிநாட்டு மருத்துவமனைகளும் இந்திய மருத்துவமனைகளோடு இணைந்து சிறப்பு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன. 

ஆனால், மத்திய அரசு இன்னும் விழித்துக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கவில்லையே என்பதுதான் வருத்தமளிக்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகியிருப்பதால் மேலதிகமாக பாதிக்கப்படப்போவது யார் என்றால், முதியோர்களும் பெண்களும் மட்டுமே. இந்தியாவில் சர்க்கரை நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.07 லட்சம் பேர்களாக இருந்தால், இதில் 5.81 லட்சம் பேர் பெண்களாக இருக்கிறார்கள். 

சர்க்கரை நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் தங்களுக்கான மருத்துவச் செலவை தங்கள் வருங்காலச் சேமிப்புத் தொகையிலிருந்துதான் செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு வேறு வருவாயோ அல்லது மருத்துவக் காப்பீடோ இல்லை. இதிலும் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அரசின் கணக்கெடுப்பின்படி சர்க்கரை நோயாளி ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 26,000 மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக செலவிடுகிறார். அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு முதியவருக்கு இந்த அளவுக்கான பணம் ஓய்வூதியத்தில் பெரும் பகுதி என்பதும், இதன் பிறகு அவர் எந்தத் தொகையை வைத்து வாழ்க்கை நடத்துவார் என்பதும் நினைத்துப் பார்க்கவே சங்கடமானது.

இதையும்விட சங்கடமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர் நோய்களாக விழித்திரை பாதிப்பால் பார்வை பறிபோதல், கால் நரம்புகள் செயலிழப்பதால் கால்கள் வெட்டியெடுக்கப்படுதல், ரத்தத்தின் மிகை சர்க்கரையைத் தொடர்ச்சியாக வெளியேற்றும் சிறுநீரகம் விரைந்து கெட்டுப்போதல் என்று பல பிரச்னைகளை முதியோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இத்தகைய மோசமான சூழ்நிலை ஏற்படாமல் சற்று தணிவான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு செய்ய வேண்டியது, இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள், இலவச ஆய்வுக்கூட வசதி ஆகியவற்றை முதற்கட்டமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய வேண்டியது இன்றியமையாதது.

அண்மையில், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், சர்க்கரை நோய் பரிசோதனை அட்டைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் அட்டைகள் தயாரிப்பில் பல்வேறு பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் விலை அதிகம். 

சிறுநீரில் சர்க்கரை அளவை நோயாளிகளே கணக்கிடுவதற்கும், ரத்தத் துளியை அட்டையில் தடவியதும் சர்க்கரை அளவை அறியும் கருவிகளும் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும் இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. மிக மலிவான விலையில், தரமான அட்டைகளை இந்திய நிறுவனங்களே உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுமானால் சர்க்கரை நோயாளிகளின் மருத்துவச் செலவு பாதியாகக் குறையும் என்பது உறுதி.

எளிய மூலிகைகளால் ஒருவர் தன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது என்றால் அதை ஊக்கப்படுத்தவும், சர்க்கரை அளவை அறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு மட்டும் ஆங்கில முறையைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்வதும் ஒரு நோயாளிக்குச் செய்யும் பேருதவி.

சில நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத மருந்துகளுடன், அலோபதி மருத்துவ ஆய்வுக்கருவிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது.எந்தவகை மருத்துவம் என்பதல்ல முக்கியம். நோய்க்கு மருந்து எது என்பதுதான் விடையாக இருக்க முடியும். இந்தப் பிரச்னையில் அரசு மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையான, நிலையான பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்கின்ற மனவருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

அதாவது இத்திட்டங்கள் இனிமேல் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும்.  வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படையே, விவசாயப் பணிகள் இல்லாத வெற்று நாட்களில் விவசாயிகள் வேலையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், அத்தகைய காலகட்டங்களில் இவர்களுக்கு அதே பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகத்தான்.  

இத்திட்டம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சுயநல விருப்பங்களுக்காக நடத்தப்படும் திட்டமாகவும், இதில் குறைந்தபட்சம் ரூ. 100 கூலியை முழுதாகத் தராமல், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குறைந்தபட்சம் ரூ. 25 வரை பிடித்தம் செய்து பங்குபோட்டுக் கொள்கிறார்கள் என்றும் புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. 

அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற வேண்டிய நாளில் இத்தகைய திட்டத்தை அரசு எடுத்துக்கொள்ளும்போது, விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்று இத்திட்டம் குறித்து பல இடங்களில் இருந்தும் பலவாறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.  உத்தரப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்த, அதற்கு அம்மாநில முதல்வர் மாயாவதி மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். 

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மாயாவதி கூறினாலும், இந்த நிதியை எந்த மாநிலமும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.  ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களுக்குத் தரப்படும் நிதிகள் தொடர்பான தணிக்கை இதுவரை மேற்கொள்ளப்பட்டதே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமன்றி, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ள பாராட்டுக்குரிய நல்ல செயல், தனது அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிப்பறைத் திட்டங்கள் குறித்தும் தலைமை கணக்கு தணிக்கையாளர் துறை ஆய்வு செய்யும் என்று அறிவித்திருப்பதுதான்.  மாநில அரசும், கிராமப் பஞ்சாயத்தும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த முறைகேடுகளிலிருந்து தப்பிவிட முடியாது. 

இத்திட்டங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக நிதிஒதுக்கீடு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அசாம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், ஒரிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் தற்போது முதல்கட்டமாக சிஏஜி தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும் இருப்பதால், மாயாவதி அச்சம் தெரிவித்திருப்பதைப்போல, வெறுமனே அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருப்பதாகத் தோன்றவில்லை. 

 மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெற முக்கிய காரணமே இதில் செய்யப்படும் பணிகள் நிரந்தரமானவை இல்லை என்பதுதான். 

ஏரி, குளத்தை ஆழப்படுத்தும் பணியும், கரைகளைப் பலப்படுத்தும் பணியும் நிரந்தரமானவையாகக் கருதப்பட முடியாத பணிகள். மழைக்காலத்தில் ஏரி, குளத்தின் கரைகள் கரைந்து போகும். ஆழப்படுத்தப்பட்ட ஏரிகள் மழையில் தூர்ந்துபோகும். ஆகவே, இத்திட்டத்தில் பொய்க்கணக்கு எழுதி சம்பாதிப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. கிராமத்து ஆள்களைக் கூட்டி வந்து மதியச் சாப்பாடு போட்டு, கையில் ரூ.20, 30 கொடுத்து அனுப்பி விட்டு, 50 பேர் வந்த இடத்தில் 100 பேருக்குக் கணக்கு எழுதினாலும் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

 இவற்றையெல்லாம் எப்படி முறையான செலவுக்கணக்கில் கொண்டுவந்தால், இந்தத் தணிக்கையை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்காக சிஏஜி அதிகாரிகள் கலந்துபேசி வருகிறார்கள். விரைவில் ஒரு பொதுவான கணக்கீட்டு முறை, பணிகள் பதிவேடு ஆகியன இத் திட்டங்களுக்கு விரைவில் உருவாக்கப்படும்.  

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதிகளை நவம்பர் 30-ம் தேதிக்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் உள்ளன. விதிவிலக்காக மிகச் சில பள்ளிகள் மட்டுமே இருக்க முடியும். இதற்குக் காரணம், தமிழக அரசு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியை முழுமையாகப் பெற்றுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. 

ஆனால், இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் உள்ளது.  இந்திய ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கி இருப்பதன் அறிகுறிதான், மத்திய அமைச்சரே தனது துறையின் கீழுள்ள ஒரு திட்டத்தைத் தணிக்கை செய்யப் பரிந்துரைத்திருப்பது. 

திட்டம் எதுவாக இருந்தாலும், சட்டம் எப்படி இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் நிர்வாகத்தின் திறமை வெளிப்படுகிறது

Saturday, November 5, 2011

கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?

கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?  அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அகமகிழ்ந்தோம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். 
ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம். 

 இன்றைக்கு நிலவரம் என்ன? 

காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது.  சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை. வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. 

இப்படியே போனால், பங்குச் சந்தையைப்போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம்கூட ஏற்படலாம்.  

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன்படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது. 

 வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?  

ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர். 

 தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர். 

 கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். 

அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகிவிட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர். 


 ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர். 

 நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர்.  

மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில்முனைவோர் கவலைப்படுகின்றனர்.  

கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.  

சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். 

 வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன. 

 இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது. 

 இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பெங்களூருவில் கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது.

thanks - dinamani

Tuesday, November 1, 2011

Tuesday, October 25, 2011

லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது என்று அன்றாடம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்கின்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்படுவதே இல்லை. ஒரு அதிகாரி குறித்து புகார் வந்தால், அதை மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது. 

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், அவர் பணியாற்றும் துறையோ கடுமையான நடவடிக்கையை எடுக்காமல், ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது தெரிவித்துள்ள புகார்.

ஹரியாணா வனத்துறை அதிகாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து வனவிலங்குகள் சரணாலயத்துக்கு பாதகம் ஏற்படும் வகையில் தனியார் பண்ணைகளை மேம்படுத்த அனுமதி அளித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் பலன் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் குறித்து அமைச்சர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கிறார். அமைச்சரவை இலாகா மாற்றத்துக்குப் பிறகு இன்னொருவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகிறார். அதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சகத் துறையிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு கடிதம் வருகிறது. என்னவென்று? விசாரணை தேவையில்லை. அந்தக் கோப்புகளை முடித்துக்கொள்ளலாம் என்று.

ஜூலை மாதம் வரையிலும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது. ""சில அரசுத் துறைகள் தங்கள் ஊழியர் மீது, குறிப்பாக அதிகாரிகள் மீது நாங்கள் பரிந்துரைக்கும் கடுமையான நடவடிக்கையை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன.

சாதாரண எளிய தண்டனையாக மாற்றிவிடுகின்றன'' என்பதுதான் இந்த அறிக்கையில் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ள கசப்பான கருத்து.அதுமட்டுமல்ல, 2010-ம் ஆண்டில் 2,982 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை தண்டித்துள்ளது. இவர்களில் 99 பேர் மட்டுமே வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது கட்டாய ஓய்வில் செல்லுமாறு துறையால் பணிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஊதிய உயர்வு ரத்து, அல்லது சில மாதங்கள் இடைநீக்கம் என்று இவர்கள் சிறு தண்டனை பெற்று மீண்டும் பணிக்கு வந்துவிடுகிறார்கள். நடப்பாண்டில் ஜூலை 2011 வரை மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திய லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பான 1,681 புகார்களில் 1,263 புகார்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால், தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது நீர்த்துப்போகுமா என்பது, அந்த அதிகாரி அத்துறையில் பெற்றிருக்கும் செல்வாக்கைப் பொறுத்தது அல்லது அவருக்கு மாநில, மத்திய ஆட்சியாளர்களிடம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தது.

இந்த ஆண்டு அதிக தண்டனை பெற்றவர்களில் 165 பேர் ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள். சுமார் 45 பேர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்தவர்கள். 9 பேர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசுத் துறைகளில் கைது செய்யப்பட்டோர் என்னவாகிறார்கள்? இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதே இல்லையா என்கின்ற கேள்வி எழுகிறது.ஊழியர் அமைப்புகள் கண்ணை மூடிக்கொண்டு தவறு செய்த ஊழியர்களைப் பாதுகாக்க வருவதுதான் இன்று ஊழல் அலுவலர்களை, முறைகேடு செய்வோரை, வேலையை ஒழுங்காகச் செய்யாத ஊழியரை அம்பலப்படுத்த பெரும் தடையாக இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை. 

ஊழியர்களின் நலனைப் பேணவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் குரலெழுப்ப வேண்டிய ஊழியர் அமைப்புகள், தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்டு நிர்வாகம் முறையாக நடைபெற உதவவேண்டிய ஊழியர் அமைப்புகள் குற்றவாளிகளின் ஏவலாளிகளாக, ஊழல் பேர்வழிகளின் பாதுகாவலர்களாகச் செயல்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. 

இதற்கு ஒரு சிறிய உதாரணம்: அரக்கோணம் ரயில் விபத்தில், டிரைவர் செல்போனில் பேசினார் என்று கூறப்பட்டபோது, எடுத்த எடுப்பில் இப்படியொரு கருத்தைச் சொல்லக்கூடாது என்று கூறியது ஊழியர் அமைப்புதான். அவர் பேசினார் என்பது உறுதியானதுமே, அதிகாரிகள்தான் செல்போனில் எங்களைப் பணிநேரத்தில் அழைக்கிறார்கள் என்று கூறப்பட்டது. 

இப்போது, அந்த நேரத்தில் வந்த அழைப்புகள் அனைத்தும் டிரைவரின் நண்பர்களிடமிருந்துதான் என்பது உறுதியான பிறகு பேச்சே இல்லை. ரயில்வேக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, 11 பேர் இறந்துபோன சம்பவத்தின் தீவிரத்தைவிட, சக தொழிலாளியைக் காக்க வேண்டும் என்கின்ற தீவிரம்தான் இன்று இந்தியா முழுவதிலும் லஞ்சமும் முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும், களையெடுக்கப்படாமலும் இருப்பதற்குக் காரணம்.

நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்ட காவல்துறையினருக்கு மாநில அரசுகள் பதவி உயர்வும், விருதும் அளித்துக் கௌரவிக்கின்றனவே, இது நீதிமன்ற அவமரியாதை இல்லையா? குற்றவாளிகளுக்குக் குடை பிடிக்கும் செயல் அல்லவா? ஆட்சியாளர்களின் ஏவலாளர்களாக இருப்பதற்குத் தரப்படும் மரியாதையாக விருதுகள் மாறி விட்டிருக்கின்றனவே, இதுவேகூட ஊழலுக்கு உரமிடும் செயல்பாடு அல்லவா?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை அறிவிக்கும் தண்டனையை அளிக்காமல் அதை நீர்த்துப் போகச் செய்தால், அதற்காக அந்தத் துறைத் தலைவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் தள்ளக்கூடாது?ஊழலை ஒழிப்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு உதட்டளவு அக்கறைதான் இருக்கிறது என்பது புரிகிறது. 

ஆனால், ஊழல் பெருச்சாளிகள் என்று தெரிந்தும் அவர்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்களே அதுதான் ஏன் என்று புரியவில்லை!
thanks - dinamani

Thursday, August 25, 2011

இந்தியாவை பாலைவனம் ஆக்கி விட்டு போகட்டும்

இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்களில் ஒன்றுதான் "இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்' மசோதா.

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உழவர் பாதுகாப்பு என்ற பெயரில் திமுக அரசால் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது நினைவு இருக்கலாம். அந்த மசோதாவுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளில் முக்கியமான ஒன்று வேளாண் பயிற்சி தொடர்பானது. விவசாயிகளுக்கு வேளாண் முறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லித்தரும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு அனுமதி பெற்ற நபர் அல்லது நிறுவனம்தான் செய்ய முடியும் என்கிற வகையில், நுட்பமாக வரையறுக்கப்பட்ட அந்த மசோதாவை இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்த்தார்கள்.

÷இப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வைக்கப்போகும் இந்திய உயிரி - தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா, தமிழக அரசு மசோதாவில் இருந்த ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை இன்னும் கடுமையாக, ஆனால் வேறுவிதத்தில் முன்வைக்கிறது. இந்த மசோதாவில் மிகப்பெரும் ஆட்சேபத்துக்குரியதாக இரண்டு பகுதிகளை கிரீன்பீஸ் ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்:

÷""....... உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள் அல்லது தாவரத்தின் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல், மக்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டுசெல்லும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டுவரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் விதிக்கப்படும்.....'' என்கிற இந்த நிபந்தனை மக்களிடம் மரபீனி மாற்றப்பட்ட விதைகள், காய்கனிகள், வேளாண் விளைபொருள்கள் குறித்த தீமைகளைப் பேசுவதையே மறைமுகமாகத் தடைசெய்கிறது.

÷அறிவியல் ஆதாரங்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் மாறுபடுபவை. பன்னாட்டு மென்பானங்களில் நச்சுத்தன்மை உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லும் முடிவுக்கு, "அனுமதிக்கப்படும் அளவு'க்கு உள்ளாகத்தான் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது அரசு. இந்த அனுமதிக்கப்பட்ட அளவு அமெரிக்காவில் ஒரு விதமாகவும், இந்தியாவில் வேறு விதமாகவும் இருக்கிறதே, அது ஏன் என்று கேள்வி கேட்பாரில்லை. இப்போதுள்ள கருத்துரிமைப்படி ஒரு வேளாண் பொருளில் நச்சுக்கலப்பு உள்ளது என்று சொல்வதற்காவது உரிமை உள்ளது. அதனை முற்றிலுமாக இந்த மசோதா பறித்துவிடும். மரபீனி மாற்றப்பட்ட உற்பத்திப் பொருள்களால் விளையும் எல்லா தீமைகளும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறது என்பதாக அரசு சொல்லும்போது, இதைப்பற்றி பேசுவதே தண்டனைக்குரியது. அப்படியானால், எப்படி மக்களிடம் இதைக் கொண்டுசெல்வது? தவறுகளைத் தட்டிக் கேட்கக் கூடாதா? மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாதா? வல்லான் வகுத்ததுதான் சட்டமா?

÷""......அரசு அனுமதித்துள்ள தாவரம் அல்லது உயிரி - தொழில்நுட்பம் சார்ந்த பொருளை அனுமதியின்றி பரிசோதனைக்கு உள்படுத்துவது (கிளீனிக்கல் டிரையல்) தண்டனைக்குரியது. இக்குற்றத்தைச் செய்பவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் தண்டனையாக விதிக்கப்படும்.....'' என்கிற நிபந்தனைகள், யாருக்காக, யாரைத் திருப்திப்படுத்த அல்லது பாதுகாக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை.

அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் இந்தப் பொருள்களைத் தனியார் அமைப்புகளும் இயற்கை ஆர்வலர்களும் பரிசோதிக்க முடியும். ஒரு விளைபொருளை அல்லது உயிரிப் பொருளைப் பரிசோதிக்கவும் அரசின் அனுமதி பெற வேண்டும் என்றால், இந்தியாவில் மக்களாட்சிதான் நடக்கிறதா என்கிற சந்தேகமல்லவா எழுகிறது. இவர்கள் தொழுதடிமை செய்து வணங்கும் அமெரிக்கத் திருநாட்டில் இப்படி எல்லாம் தடை இல்லையே. அங்கே தரப்படும் சுதந்திரமும் உரிமையும் இங்கே மட்டும் தட்டிப் பறிக்கப்படுகிறதே, ஏன்?

÷மசோதாவின் இத்தகைய பிரிவுகள் முழுக்கமுழுக்க, மரபீனி மாற்றுப்பயிர்களில் (ஜி.எம். புராடக்ட்ஸ்) ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலால் செருகப்பட்ட நிபந்தனைகள்தான் இவையெல்லாம் என்பதுதான் போராட்டம் நடத்தும் இயற்கை ஆர்வலர்களின் கருத்து. ஆனால், இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தாகிவிட்டது. இப்போது, அண்ணா ஹசாரே விவகாரத்தால் மக்களின் மனமும், ஊடகங்களின் கவனமும் வேறுதிசையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் சந்தடி சாக்கில் விவாதம் இல்லாமலேயே இந்த மசோதா நிறைவேறும் அபாயம் நிறையவே இருக்கிறது. இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடுகிறது என்பதுடன் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் துறை தலையிட முடியாததாகவும் உள்ளது.

÷ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி உற்பத்தியில் மரபீனி விதைகள் இந்திய மண்ணில் வேரூன்றிவிட்டன. 2009-10-ம் நிதியாண்டில் 2.43 லட்சம் குவிண்டால் பி.ட்டி. பருத்தி சந்தைக்கு வந்தது, 2010-11-ம் நிதியாண்டில் 2.60 லட்சம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது. இப்போது வடமாநிலங்களில் பி.ட்டி மக்காச்சோளம் விதைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன மரபீனி மாற்றுப்பயிர் நிறுவனங்கள். பி.ட்டி. கத்திரிக்காய் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

÷இந்த நேரத்தில் இப்படியொரு மசோதா. கேள்விக்கு ஒருவர் இல்லை.

thanks to dinamani

Thursday, February 10, 2011

இஸ்ரோ ஊழல் --திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான்

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பிரிவு என்று சொன்னால் அது மிகையல்ல. ஆராய்ச்சியாளர்கள், இந்திய அறிவுசார் வல்லுநர்கள் மட்டுமே இதில் இடம்பெற்று, அறிவியல் கண்டுபிடிப்பின் அனைத்து நன்மைகளையும் இந்திய மக்களுக்கு அளித்து வருகிறார்கள் என்பதுதான் இதுவரைக்கும் நம் அனைவருக்கும் இருந்த கருத்து.

இவர்கள் ஏவும் செயற்கைக்கோள் பாதியில் வெடித்துச் சிதறினாலும், பழுதானாலும், பாதைவிலகி பயனற்றுப் போனாலும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களை யாரும் குறை சொன்னதில்லை. தவறுகளைத் திருத்தி இன்னும் நன்றாக மீண்டும் செயற்கைக்கோள் செலுத்துங்கள் என்றுதான் அரசும் மக்கள் அமைப்புகளும் ஊக்கப்படுத்தின. தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதலில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதற்கான துறைவாரி குழு அமைத்து விசாரித்தபோதும்கூட யாரும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

ஆனால் அத்தனை நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது, அரசுக்கே தெரியாது நடைபெற்றுள்ள ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம்.

பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விண்வெளித் துறைக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ், தனியார் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியாவுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்களுக்கென்று, அவர்களுக்கு வசதிப்படும் தொழில்நுட்பங்களுடன் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கும், எஸ்-பாண்டில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அது மட்டுமா? தேவாஸ் மல்டிமீடியா தனது உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்கிறது அந்த ஒப்பந்தம். வெறுமனே 60 நாள்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவித்தால் போதும் (அனுமதி பெறவேண்டியதில்லை) என்று அந்த ஒப்பந்தம் அனுமதித்திருப்பதையும், மக்கள் பணம் ரூ.2,000 கோடியில் இரண்டு செயற்கைக்கோள் ஏவ முன்வந்திருப்பதையும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல் இருப்பதென்றால், இதைவிட ஒரு தேசத் துரோகம் என்னவாக இருக்க முடியும்?

எஸ்-பாண்டு அலைக்கற்றை மூலம், கைப்பேசி சேவையையும் தற்போது டாடா ஸ்கை, டிஷ்டிவி போல வீட்டுக்கு ஒளிபரப்பை நேரடியாகக் கொண்டு வருவது மட்டுமன்றி, இந்தியாவின் கனிமவளம், நீராதாரம், மழை, ராணுவச் செயல்பாடுகள் ஆகியவற்றையும்கூட கண்காணிக்க முடியும் என்கிறபோது, பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாமல் இப்படியான ஒப்பந்தம் போடவும், யாருக்கு வேண்டுமானாலும் உரிமையை மாற்றலாம், விற்கலாம் என்பதும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஒரு சாதாரணப் பாமரனுக்கு ஏற்படும் கலக்கம்கூட விஞ்ஞானிகளான படித்தமேதைகளுக்கு இல்லாமல் போனது எப்படி? இவர்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான் என்பது அண்மைக்காலமாக வெளியாகும் அனைத்து ஊழல்களிலும் அம்பலமாகிறது. இப்போது விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். 2010 ஜூலை மாதம் உள்ளாய்வுக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு, இது தொடர்பாக அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கிறார். ஒப்பந்தம் போட்டபோது தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ரத்துசெய்ய மட்டும் அரசின் ஆலோசனையா? வேடிக்கையாக இல்லையா இந்தக் காதில் பூச்சுற்றும் வேலை?

ஒப்பந்தம் ரத்து காரணமாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கு நஷ்டஈடு தரும் அவசியமில்லாதபடி செய்வோம் என்கிறார். ஏன் மற்ற நிறுவனங்களையும் அழைத்து விலைகோரவில்லை என்ற கேள்விக்கு, தேவாஸ் மல்டிமீடியா உருவாக்கியது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அறிவியல் பயன்பாடு ஆகும் (!) என்கிறார். எல்லாவற்றுக்கும் இப்படி ஏடாகூடமான ஏதாவது ஒரு பதில் அவர்களிடம் இருக்கிறது.

"இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை என்பதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு என்று சொல்வது தவறு' என்று பிரதமர் அலுவலகம் சொல்கிறது. மிகச் சரி. பத்திரிகைகளில் அம்பலமான பிறகுதானே இதை ரத்துசெய்ய முடிவு செய்திருந்தோம் என்கிறீர்கள். ஏன் ஒப்பந்தம் செய்ததை 5 ஆண்டு காலம் மறைத்தீர்கள்? 2010 ஜூலை மாதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள் என்பதால்தான், இஸ்ரோ உள்ளாய்வுக் குழு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்ற முடிவுக்கே வந்தது என்பதுதானே பச்சையான உண்மை. இப்போது பிரதமர் அலுவலகம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள், இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பதையெல்லாம் துருவிப் பார்த்தால்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியும் உண்மைகளும் தெரியவரும். இஸ்ரோ அதிகாரிகள், பெருந்தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள் கூட்டணியில்தான் இந்த ஒப்பந்தம் சாத்தியம். வேறு எந்தக் குப்பனும் சுப்பனும் இந்த ஒப்பந்தத்தைப் போட முடியாது. இதில் குற்றத்தின் பங்கு அதிகாரிகளுக்கே அதிகமாக இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படாமலா இருப்பார்கள்?

இஸ்ரோவில் அறிவியல் செயலராகப் பணியில் இருக்கும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்துவிட்டு, அரசு ஓய்வூதியப் பலன்களை அனுபவித்தபடி, தேவாஸ் மல்டிமீடியாவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில், முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றும்போதே, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தனியார் பள்ளித் தாளாளர் ஆக முடியும்; கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கல்லூரிகள் தொடங்க முடியும்; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பாகவே மருமகன்களை கோடீஸ்வரர்களாக்க முடியும் என்கிற நிலைமை எல்லாத் துறைகளையும் சீரழிக்கும் புற்றுநோயாகப் பரவிவிட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெறும் உயர் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பொறுப்பேற்கவும், ஆலோசகர்களாக இருக்கவும் முடிகிறது. தான் சீரழிந்ததோடு நில்லாமல், அந்தப் பிரதமர் க்கு உயர்ந்துள்ள தனது ஜூனியரையும் வûளைத்துப்போட இவர்கள் பேருதவியாக இருக்கிறார்கள். காட்டு யானைகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தும் யானைகளுக்கு "கும்கி' என்று பெயர். அரசு அதிகாரிகள் அளவிலும் இத்தகைய "கும்கி'கள் பெருகிக்கிடப்பதுதான் மலிந்துவிட்ட ஊழலுக்கே ஓர் அடிப்படைக் காரணம்.

விஞ்ஞான பூர்வமான ஊழலை அரசியல்வாதிகள் செய்யும்போது, விஞ்ஞானிகள் அதைவிடத் துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்துவிட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் "இஸ்ரோ' விஞ்ஞானிகள்.

பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியாமல் என்னவெல்லாமோ நடக்கிறது என்று சொன்னால், பிறகு அந்தப் பிரதமர் பதவியில் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன?