Tuesday, May 26, 2009

வாழ்க்கையில் ஒரு சவால்

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

தேங்க்ஸ் - என்.கணேசன்.

கர்ம யோகம்

பலனுக்காகத் தானே பாடுபடுகிறோம், ஒரு செயலைச் செய்ய முற்படுகிறோம். ஆனால் பலனையே எதிர்பாராது வேலை செய் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கர்மயோகத்தைக் குறை கூறுவது உண்டு. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று ரத்தினச் சுருக்கமாக கர்மயோகத்தைச் சொல்லும் போது இப்படித் தோன்றுவது தவறும் அல்ல. ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மயோகம் முரண்பாடில்லாதது என்பதையும் அது ஒரு அருமையான செயல் மேம்பாட்டுத் தத்துவம் என்பதையும் நாம் உணர முடியும்.

செயலிலேயே விளைவும் இருக்கிறது, எனவே விளைவைப் பற்றிய கவலையோ, சந்தேகமோ தேவையில்லை என்பதையே பகவான் கூறுகிறார். ஒரு பென்சிலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கீழே போடத் தயாராக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கைவிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே எனக்கு சுதந்திரம் உண்டு. கைவிட்டு விட்டால் அந்த செயலிலேயே அது கீழே விழும் என்ற இயற்கை விதியாகிய பலன் இருக்கிறது. அதை விட்ட பின் கீழே விழுமா என்ற சந்தேகமும்,
கீழே விழுந்து விட்டதே என்ற வருத்தமும் ஏற்பட்டால் அது முட்டாள்தனமே.

ஒரு ஊருக்குப் போகிற பாதையை வழிகாட்டிப் பலகை பார்த்து அந்தப் பாதையில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் நடக்க ஆரம்பித்தபின் ஊரின் தூரம் ஒவ்வொரு அடியாகக் குறைந்து கொண்டே வருகிறது இயற்கையே. நடக்கும் வேகத்திற்கேற்ப சீக்கிரமாகவோ, தாமதமாகவோ நாம் போய் சேர்வது உறுதி. ஊருக்குப் போய் சேர்வோமா என்ற சந்தேகமோ, பரபரப்போ தேவையில்லை.

எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்கிறார் பரமாத்மா.

இதை சுவாமி சின்மயானந்தர் அழகாகச் சொல்வார். "In fact, the reward of an action, when we understand it properly, is not anything different from the action itself. An action in the PRESENT, when conditioned by a FUTURE time, appears as the fruit of action. In fact, the action ends or fulfils itself as reaction or fruit in future."

பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது நிச்சயமாக நமது செயல் திறத்துக்கு குறுக்கீடுகளை ஏற்படுத்தும். சீரான மனநிலையில் சிந்தித்து தேவையானவற்றை சிறப்பாகச் செய்ய பற்று நம்மை அனுமதிப்பதில்லை. பல சமயங்களில் தலைக்கனம் ஏற்படுத்தி தொடர்ந்து செய்யும் காரியங்களில் அலட்சியத்தை ஏற்படுத்தி விடக் கூடியது. எனவே தான் பற்று இன்றி செயல்கள் புரிய கர்மயோகம் அறிவுறுத்துகிறது.

பலனில் பற்று என்பது வேறு வகைகளிலும் நம் செயல் திறனைக் குறைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நல்ல செயல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ குறைந்து போனால் அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு அடுத்த செயல்களிலும் தொடரும்; நமது செயல்திறன் குறையும்.

நம் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நம் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும்.

உங்கள் திறமைகள் பலன் தராமல் இருக்கப் போவதில்லை. பூத்துக் குலுங்கும் மலர்கள் வண்டுக்கு சீட்டு எழுதி அனுப்பத் தேவையில்லை. ரமண மகரிஷி போன்ற ஞானிகள் சீடர்களையும் பக்தர்களையும் தேடிப் போனதில்லை. என்ன சொன்னால் பிரபலமாவோம் என்று கவலைப் பட்டதில்லை. ஏன் ஆரம்பத்தில் அதிகமாக ரமண மகரிஷி வாய் திறந்து கூடப் பேசியதில்லை. ஆனால் அவரிடம் இருந்த ஆன்மீக சக்தி காந்தமாக உலகை அவர் பக்கம் ஈர்த்தது.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. அப்படி முழுமையாகச் செய்த செயல்கள் என்றும் சிறக்காமல் போனதில்லை. காலத்தை வென்று நிற்கும் அத்தனை அற்புத சாதனைகளும் அப்படி செய்யப்பட்டவையே.

எனவே செயலையும் செயல்முறையயும் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள். உற்சாகமாகச் செய்யுங்கள். செயலைச் செய்யும் போது உயிரோட்டத்துடன் இருங்கள். உங்கள் செயல் சிறப்பாக அமையும். பலனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் செயலிலேயே பலனை விதைத்து விட்டீர்கள். தக்க காலத்தில் பலன் வந்தே தீரும். அது இயற்கையின் விதி. இதுவே கர்மயோகம்.

(மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகம் பற்றி விவரித்ததோடல்லாமல் மகாபாரதத்தில் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். பரம்பொருள் தேரோட்டியாக பணி புரிவதா என்று பின் வாங்கவில்லை. தேரோட்டி என்பது யுத்தம் ஆரம்பிக்கும் போது தயார் நிலையில் இருக்கும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வேலையைத் தொடங்குவது அல்ல. அதிகாலை எழுந்து குதிரையைக் குளிப்பாட்டி அதனுடன் அன்பான உறவை சாரதி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் யுத்தகளத்தில் குதிரை சொன்னபடி இயங்கும் என்பது நிச்சயமில்லை. ஸ்ரீகிருஷ்ணர் குதிரைகளைக் குளிப்பாட்டும் அழகை வியாசர் மிக அழகாக மகாபாரதத்தில் விவரிக்கிறார்.

அதுமட்டுமல்ல தேரில் இருந்து போரிடும் வீரன் தேர் எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதை தன் காலால் தேரோட்டியின் தோளில் அழுத்தி சமிக்ஞை செய்வான். அதன்படி தான் சாரதி தேரை ஓட்ட வேண்டும். அப்படி அர்ஜுனனின் கால்மிதிகளை பதினெட்டு நாள் வாங்கிக்கொண்டு சாரதியாக இருந்திருக்கும் பகவான் கர்மயோகத்தை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் விளக்கி இருக்கிறார்.)


தேங்க்ஸ் -என்.கணேசன்

கோபத்தைக் களைவது எப்படி?


லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தகைளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


தேங்க்ஸ் - என்.கணேசன்

Saturday, May 16, 2009

தொடரும் சோகம்

அதிக மதிப்பெண் பெற்றால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உண்மைதான். அதற்காக மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல தனியார் பள்ளிகள் நடத்துவதும் இதை கல்வித்துறை கண்டும் காணாமல் இருப்பதும் புரியாத புதிர்.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துகிறது. பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சதம் அடித்துள்ளது. என்றாலும்கூட, தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவியர் மட்டும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் முற்பகல் மட்டும் இவர்களுக்காகச் செயல்படுகிறது.

பிளஸ்-2 தேர்வுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் பிளஸ்-2 தொடங்கிவிடுகிறது. இந்த மாணவர்கள் ஜூன் மாதம் பிளஸ்-2 வகுப்புக்குச் சென்றவுடன் அவர்களுக்குத் தொடர்ந்து நாள்தோறும் தேர்வுகள் வைத்துப் பழக்குகிறார்கள். வினா வங்கி முழுவதற்கும் பதில் சொல்லும் யந்திரன் போல மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி.

"அரசுப் பள்ளிகள்தான் நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கின்றன; தனியார் பள்ளிகளிலாவது இத்தகைய நல்ல கல்வி கிடைக்கட்டுமே' என்ற தவறான கருத்தாக்கம் பொதுமக்களிடம் உள்ளது. மக்களிடம் ஏற்படும் இந்த நல்ல எண்ணம்தான் தனியார் பள்ளிகளுக்கு முதலீடு என்பதையும், மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக வைத்து, பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் பொதுமக்கள் அறிவதில்லை.

தங்கள் பள்ளி மாணவர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும் தொடர்ந்து இத்தனையாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி என்றும் தம்பட்டம் அடிக்கத்தான் இப்படியாக மாணவர்களை பிழிந்தெடுக்கிறார்கள். இந்த மாணவர்கள் எந்தெந்தக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற பட்டியலைத் தயாரித்து அதையும் விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்புடன் கல்விக் கட்டணத்தை மேலும் மேலும் உயர்த்துகிறார்கள். சில தனியார் பள்ளிகள், அவர்தம் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பணம் கொடுத்து (பங்குச் சந்தை போலவே) வாங்கி, கட்டணச் சலுகை தந்து, பிளஸ்-2 தேர்வில் அவர்கள் பெறும் சிறப்புகளைத் தங்களுடன் அடையாளப்படுத்தி கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். பெற்றோரால் இந்தக் கல்விக் கட்டணத்தை மறுக்க முடியாத நிலைமையை உருவாக்குகிறார்கள்.

இந்த நடைமுறை மாணவர்களிடம் மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்பதுடன் அகில இந்திய அளவில் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலும் தடையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெறும் கேள்வி-பதிலை மட்டுமே மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் சேரும்போது, அவர்கள் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மூளைத் திறன் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. மனவெறுமையை இட்டு நிரப்ப சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் இரக்கமற்ற முரடர்களாக ஆகிறார்கள். சிலர் படிப்பின் மீது வெறுப்புற்று உயர்கல்வியில் கரையும் நிழல்களாக மாறுகிறார்கள்.

இந்த நடைமுறையின் இன்னொரு பாதிப்பு தமிழகத்திற்கானது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடிவதில்லை. காரணம், அங்கு கேட்கப்படும் கேள்விகள், அடிப்படை அறிவியலில் மூளையை சிந்திக்கத் தூண்டுபவை. ஆனால் இங்கோ வெறும் பல ஆயிரம் கேள்விக்கு உடனே பதில் எழுதும் பயிற்சி மட்டுமே தரப்படுகிறது. அரசுப் பள்ளிகளை மனதில் வைத்து, பாடத்திட்டங்களையும் குறைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு அவசியம் இல்லை என்றாகிவிட்டது. இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிகிறது.

இந்தியா முழுவதும் திறந்து கிடக்கும், மிகக் குறைந்த கட்டணத்திலான உயர்கல்வி வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் இழந்து வருகிறார்கள்.

ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றும், இந்தக் கல்வி ஆண்டிலாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படாதா என்றும் ஆதங்கப்படுவதுதான் நமது தலைவிதி என்று நினைத்துவிட முடியாது. ஏமாற்றங்களால் துவண்டு விட்டால் மாற்றங்கள் ஏற்படாது!

தேங்க்ஸ் டு dinamani