Tuesday, December 20, 2011

வீணாவது நமது வரிப்பணம்!

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் தனித்துவமான அடையாள எண் (ஆதார்) அளிக்க வகை செய்யும் தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை அதன் தற்போதைய வடிவில் ஏற்க இயலாது என பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு நிராகரித்துவிட்டது. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இந்தக் குழுவின் இந்த முடிவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பின்னடைவு.  

தேசிய அளவிலான எந்தவொரு திட்டமானாலும் நாடாளுமன்றத்தில் அதுதொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்பூர்வ அதிகாரம் கிடைத்த பிறகே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆதார் அடையாள எண் விஷயத்தில் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல், நிர்வாக அதிகாரத்தின் மூலம் கடந்த ஆண்டு, செப்டம்பரிலேயே நந்தன் நிலகேணி தலைமையிலான இதற்கான தேசிய ஆணையம் தனது பணிகளைத் தொடங்கிவிட்டது.

 இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்துவமான அடையாள எண் வழங்குவதுதான் ஆதார் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இத்தகைய அடையாள எண் வழங்கப்படும். குடும்ப அட்டை, செல்போன் இணைப்பு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை ஓர் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.  

ஆதார் தேசிய அடையாள எண் பெறுவதற்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிம அட்டை உள்ளிட்ட முகவரிச் சான்று ஆவணம் ஏதாவது ஒன்றைக் காண்பித்து, அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பதிவு மையத்தில் (அஞ்சல் நிலையம், வங்கி உள்ளிட்டவை) முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரரின் விரல் ரேகை, கருவிழி ஆகியவை கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு அவருக்கு தனித்துவமான தேசிய அடையாள எண் வழங்கப்படும்.  எந்தவொரு திட்டமானாலும் அது நடைமுறைச் சாத்தியமா என்பது குறித்து குழு அமைத்து தீவிரமாக கள ஆய்வு செய்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 120 கோடி பேருக்கும் இந்தத் தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, இத்தகைய கள ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது முதல் கோணல். இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் திட்ட மதிப்பீடு எதுவும் தயாரிக்கப்படவில்லை. 

இது இரண்டாவது சறுக்கல்.  தொடக்கமே முறையாக இல்லாத இந்தத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் வழங்குவதற்காக ரூ. 3,170 கோடியை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. 120 கோடிப் பேருக்கும் அடையாள எண் வழங்குவதற்கு உத்தேசமாக ரூ. 72,000 கோடி தேவைப்படலாம் என சுயேச்சையான மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்கெனவே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இதே பாணியில் அடையாள எண் வழங்குவதற்காகத் தகவல்களைப் பதிவு செய்வதும், அதற்காக பெரும் தொகையைச் செலவிடுவதும் தேவைதானா என மத்திய நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல, தேசிய அடையாள எண் திட்டமானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகமும் தனது பங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இரு முக்கிய அமைச்சகங்களின் எதிர்ப்பையும் மீறி, அவசரகதியில் ஆதார் திட்டத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.  

தேசிய அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு முகவரிச் சான்று எதுவும் இல்லாவிட்டாலும், ஏற்கெனவே இதைப் பெற்றுள்ள மற்றொருவர் அறிமுகப்படுத்தினாலே போதும் என்ற விதியால், சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களும் இந்த எண்ணை எளிதாகப் பெற்றுவிட முடியும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பது உள்துறை அமைச்சகத்தின் நியாயமான வாதம். 

 மேலும், இந்த அடையாள எண்ணைப் பெறுவதற்காக பொதுமக்கள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்புச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை. இதுவும் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 

 அதோடு, இந்த அடையாள எண்ணுக்காக பொதுமக்களின் விரல் ரேகை, கருவிழி (பயோமெட்ரிக்) போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. விரல் ரேகை சேகரிப்பில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.  வளர்ச்சியடைந்த நாடான பிரிட்டனில் இதேபோன்று தேசிய அடையாள எண் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டத்தை பிரிட்டன் பாதியிலேயே கைவிட்டுவிட்டது. 

மக்கள்தொகை குறைவாக உள்ள பிரிட்டனிலேயே இந்த நிலைமை என்றால், உலகிலேயே அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் இந்தத் திட்டத்தை எப்படி முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்பதை மத்திய அரசு ஏன் சிந்திக்கவில்லை?  தற்போது தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவே நிராகரித்துவிட்டது. மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது? அப்படியானால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, ஏற்கெனவே இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3,170 கோடி விழலுக்கு இறைத்த நீர்தானா? இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை=உணவுப் பாதுகாப்பு மசோதா

உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. 

 உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.  ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன.


இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.  அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.  முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். 

இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.  ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது.

இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.  மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. 

அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப்போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.  

கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. 

 இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.  

வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். 

சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர். 

 வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.  மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து.

இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? 

பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?  மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!

 விலை நிலங்கள் வீட்டுமனைகளாகி வருகின்ற வேகத்தை பார்த்தால் இந்தியா முழுவதும்விவசாயம் செய்யும் நிலங்களின் மொத்த கணக்கு சரிதானா?என்பது கேள்விக்குரியதாக உள்ளது.தரிசு நிலங்கள் விளை நிலங்கலாகவேண்டும்.விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க தடை விதிக்கவேண்டும்.இலவசங்களை மறு பரிசீலனை செய்தால்தான் பொருளாதாரம் மேம்படும்.

  இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.அதாவது இந்த்ததிட்டமானது ஏழைகளுக்கு கொடுப்பதுபோல் கொடுத்து வாக்குகளையும் வாங்கிக்கொண்டு மக்களை எமாடுவதொடு தொளிலதிபர்க்ளளையும் கைக்குள் போட்டு தேர்தல் செலவுக்கும் பணம் வாங்கவே இந்தத்திட்டம்