Thursday, April 30, 2009

சுவிஸ் வங்கிப் பணம் இந்தியாவுக்கு வருமா? --- அர்ஜுன் சம்பத்

உலகத்திலேயே மிக வளம் பொருந்திய நாடாக இந்தியத் திருநாடு திகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் 36% இந்தியாவின் கைகளில் இருந்தது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, அடிமைப்படுத்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தனர் என்பதை நாம் சரித்திரத்தில் படித்திருக்கிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு வெள்ளையர்கள் கொள்ளையடித்ததைவிட மிக அதிகமாக, நம்மவர்களே நமது நாட்டின் வளத்தை சுரண்ட ஆரம்பித்தனர். உலகின் வறுமைசூழ்ந்த நாடுகளில் ஒன்றாக நமது நாடு தற்போது மாறியுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை ஏழை, எளிய மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். வறுமைக்கோடு என்றால், ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் இருப்பவர்கள். இன்னொருபுறத்தில் ஒரு சிறிய கூட்டம், இந்தியாவின் வளத்தின் பெரும்பகுதியை அனுபவித்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறது. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட, ஊழல் மூலம் சுரண்டப்பட்ட கணக்கில் வராத பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சமீபகாலமாக பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.


இங்கிலாந்தில் நடைபெற்ற பொருளாதார வளம் பொருந்திய ஜி-20 நாடுகளின் மாநாட்டிலும் இதுகுறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. தற்போது சர்வதேச அரங்கில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்களது நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டுவதற்காக மேற்கண்ட நாடுகள் பெரும் முயற்சியை எடுத்து வருகின்றன. சுவிட்சர்லாந்து வங்கிகள் போன்ற பணம் பதுக்கும் வங்கிகளில் இந்திய நாட்டுப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல, மேற்கண்ட நாடுகளின் பணமும் அங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள், சுமார் 40-க்கும் மேலுள்ளன. சுவிட்சர்லாந்து, மலேசியாவை ஒட்டியுள்ள தீவுகளில் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள் உள்ளன. இத்தகைய வங்கிகளில் கணக்கில் வராத கருப்புப் பணம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கொள்ளையடிக்கப்படுகின்ற பணமும் பதுக்கி வைக்கப்படுகின்றது.


இந்த வங்கிகளில் மூலதனம் செய்து வட்டி வருவாயை எதிர்பார்த்து யாரும் இங்கே கொண்டு போய் பணத்தைப் பதுக்குவதில்லை. இந்த வங்கிகள் கொடுக்கும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே, இங்கு பணத்தைப் பதுக்கி வருகிறார்கள். இந்த வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? யார் மூலம் வருகிறது? எதனால் வருகிறது? என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. பணம் கொடுத்தால், பதுக்கி வைத்து ரகசியத்தைக் காப்பாற்றி பணத்தைத் திருப்பிக் கொடுப்பார்கள். இதன் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் கொள்ளையடிப்பவர்களும், கொலை செய்பவர்களும், போதை மருந்து கடத்துபவர்களும், ஆயுத பேர ஊழல்கள் செய்பவர்களும் தங்களது ரத்தக் கறை படிந்த பாவப் பணத்தை இத்தகைய வங்கிகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதன் காரணமாக, உலக அளவில் பயங்கரவாதமும், வன்முறைச் செயல்களும், தேச விரோத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதச் செயல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு இந்த வங்கிகள் பெரிதும் காரணமாக உள்ளன.



சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கவும், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கவும் பெருமுயற்சி எடுத்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இது விஷயத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிக்கிடப்பதை மீட்பதற்காக அமெரிக்காவில் போதிய சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறார் ஒபாமா. சர்வதேச அளவிலும் உரிய சட்ட விதிமுறைகளின் மூலம் முயற்சி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் இது விஷயத்தில் சுவிட்சர்லாந்தின் மீதும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விவாதிப்பதற்காக மட்டுமே தாம் ஜி-20 மாநாடுகளில் பங்கேற்றிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜெர்மனி புலனாய்வு அதிகாரிகள் இத்தகைய பணம் பதுக்கும் வங்கி ஒன்றிலிருந்து ரகசியக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை சாமர்த்தியமாகப் பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் தினசரி ஒன்றில், நிதி அமைச்சரின் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியர்கள் சிலர் இடம்பெற்றிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்களை இந்திய நாட்டுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நமது நாட்டு ஆளுங்கட்சியினரும், பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும் இதுகுறித்து மெüனம் சாதித்து வருகின்றனர். ஜி-20 மாநாட்டில் இதுபற்றி நமது நாட்டின் சார்பில் எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஜி-20 மாநாடுகளில் இதுகுறித்து விவாதிக்க முடியாது என்றும், சுவிட்சர்லாந்து நாட்டின் மீது பழிசுமத்துவதற்கான இடம் ஜி-20 மாநாடு அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் பெரும் பொருளாதார வல்லுநர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் சிற்பிகள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டுச் செல்வத்தை மீட்கும் நோக்கில் இல்லை. உலகிலுள்ள எல்லா நாடுகளும், பணம் பதுக்கும் இத்தகைய வங்கிகளிலுள்ள தங்கள் நாட்டுச் செல்வத்தை மீட்பதற்குரிய முயற்சிகளைச் செய்து வருகின்றன. தற்போது இது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

2006-ம் ஆண்டு முதல் தற்போதைய 2009-ம் ஆண்டு வரை உள்ள கணக்கின்படி, உத்தேசமாக 74 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் இதுகுறித்து பெரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உலகளாவிய கருப்புப் பணத்தில், அதாவது பதுக்கப்பட்ட பணத்தில் 56% இந்தியர்களின் பணம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு தொடர்பு கொண்டால் தங்கள் நாட்டு சட்டதிட்டங்களின்படி உரிய பதில் தருவோம் என்று சுவிட்சர்லாந்துக்கான நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்கான சுவிட்சர்லாந்தின் சிறப்புத் தூதரும் கருப்புப் பணம் நிறைய உள்ளது என்பது உண்மை என்று நமது தலைநகரிலேயே உறுதிப்படுத்தியுள்ளார். இது தேர்தல் நேரமாக இருக்கின்ற காரணத்தினால், தற்போது இந்தப் பிரச்னை மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாளில் சுவிஸ் வங்கியில் முடங்கிக் கிடக்கும் பணத்தை மீட்கப் போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விஷயம் இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டுகளும் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பதில் சொல்லும் நிலையில் சுவிஸ் நாடோ அல்லது இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகளோ இல்லை. இப்போது சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரும் அரசியல் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இத்தகைய வங்கிகளின் செயல்பாடுகள் காரணமாக, உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களும், சட்டவிரோதச் செயல்களும் பெருகி வருகின்றன. இதுகுறித்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் கவலை கொண்டுள்ளன. இந்தியாவைப்போல அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்தியாவில் உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்காக ஆர். வெங்கட்ராமன் நிதி அமைச்சராக இருந்தபோது தானாக முன்வந்து கணக்குகளை ஒப்படைத்தால், அதை ஏற்றுக் கொண்டு கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உரிய சட்டப் பாதுகாப்பை கொடுப்பதாக உறுதியளித்தார். அதன் காரணமாக ஒரு சிலர் குறைந்த அளவு கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வந்தனர்.

மேற்கண்ட நடவடிக்கைகளைப் போல தொடர்ந்து நாம் செயல்பட்டால், உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதுபோல, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தையும் வெளியே கொண்டு வர முடியும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை புதிதாக அமைகின்ற ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதன் மூலம் இந்திய நாடு பெரும் வல்லரசாகவும், நல்லரசாகவும் உருவெடுக்க முடியும்.

தற்பொழுது இரண்டு காரணங்களுக்காக நாம் இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒன்று, மேலும் கருப்புப் பணப் புழக்கமும், பயங்கரவாதிகளின் செயல்களும் ஊக்குவிக்கப்படாமல் இருக்க வேண்டும். இரண்டு, நமது தேசத்தின் வறுமை நீங்கி, வளம் பெருகிட வேண்டும். இத்தகைய நடவடிக்கையை நாம் எடுக்கவில்லையெனில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். நமது தேசத்தின் முன்னேற்றம் தடைபடும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கே நமது ஓட்டு என்பதையும் நம் மக்கள் உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்.

அழியும் விவசாயம்

"உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று வள்ளுவப் பேராசானும், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று மகாகவி பாரதியும் பாடிய நாட்டில் உழவுத் தொழில் என்பது அழிந்து வருவது வேதனையிலும் வேதனை. விவசாயக் குடும்பங்களில் இளைஞர்கள் கல்லூரிப் படிப்புக்குச் சென்றுவிட்டதால் நகரங்களில் குடியேறி கிராமங்களுக்கே திரும்பாத நிலையில், பல கிராமங்கள் வெறிச்சோடிக் கொண்டிருக்கின்றன.

போதாக்குறைக்கு, விவசாயம் என்பது லாபகரமல்லாத, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தொழிலாகிவிட்டது. அவ்வப்போது, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்குக் காப்பீடு என்று சில சலுகைகள் தரப்படுவதன்றி, பெரிய அளவில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏதாவது செய்கிறதா என்றால் சந்தேகமே.

வேளாண் துறையினர் ஆயிரம் விளக்கங்கள் கூறலாம். பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம். ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்குக் காட்டலாம். மாதிரிப் பண்ணைகள், இலவச மின்சாரம் மற்றும் விதைகள், செயல் பயிற்சிகள் எல்லாம் உங்கள் கண்ணில்படவில்லையா என்று கேட்கலாம். இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காணவில்லையே, ஏன்? அடிப்படைப் பிரச்னை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல. விவசாயக் கூலிக்கு ஆள்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை. அப்படியே ஆள்கள் கிடைத்தால், அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது. தடையில்லாத மின்சாரம் கிடையாது. இதெல்லாம் இருந்து, வங்கிக் கடனும் கிடைத்துப் பயிரிட்டு, உரமிட்டு, அறுவடை செய்தால் விளைபொருளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. சந்தைப் பொருளாதாரம் என்கிற சாக்கில் இடைத்தரகர்கள் கொழிக்கிறார்களே தவிர பயிரிடும் விவசாயிக்கு எஞ்சுவதென்னவோ வறுமையும் கடனும்தான். நிலத்தை விற்கலாம் என்றால் வாங்க ஆள் கிடையாது. விளைநிலத்தை வீட்டு மனையாக்க முனைவோரும் சரி, அடிமாட்டு விலைக்கல்லவா விவசாயிகளை ஏமாற்றி விடுகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில்கூட விவசாயத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாம் இங்கே பங்குச் சந்தையையும் சென்செக்ûஸயும் மட்டுமே முன்னிறுத்தி நமது திட்டங்களையும், செயல்பாடுகளையும் வகுக்கிறோமே, அவர்கள் அப்படிச் செய்வதில்லை.


அமெரிக்கப் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்து வரும் இந்த வேளையில்கூட, விவசாயிகளுக்கான சலுகைகள் எதுவுமே குறைக்கப்படவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவது, இளைஞர்களைப் பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபடத் தூண்டுவது, கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ஊக்கமளிப்பது, பாசன வசதிகளை அதிகரிப்பது, விளைபொருள்களுக்கு அதிக விலை கொடுத்து விவசாயிகள் தொழிலை விட்டுவிடாமல் ஊக்கப்படுத்துவது என்று இந்தப் பிரச்னையை அரசு அணுக வேண்டாமா? அறுவடைக்குப் பிறகு, சேமிப்பு மற்றும் விற்பனை வரை விவசாயிக்கல்லவா முன்னுரிமை தந்து திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்? விளைநிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதுபோல ஒரு நரக வேதனை எதுவும் கிடையாது என்பது விவசாயம் செய்தவர்களுக்குத்தான் தெரியும். உழுது பயிரிட்டு, பாதுகாத்து அறுவடை செய்து ஆனந்தப்பட்ட ஒரு விவசாயிக்கு வேறு வேலைக்கோ, தொழிலுக்கோ போக மனம் ஒப்பாது. விவசாயம் பண்ண முடியவில்லை என்கிற இயலாமைதான் பலரை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளுகிறது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கோரியிருப்பதைப்போல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும். மத்திய அரசின் சம்பளக் கமிஷன்போல, திட்டக் கமிஷன்போல, வேளாண்மைக்கும் ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவின் உணவு உற்பத்தித் தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும். அது உறுதி செய்யப்பட்டால்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நகர்ப்புறங்களிலிருந்து மீண்டும் மக்களைக் கிராமப்புறங்களுக்குத் திரும்பும்படி செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி, விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பதும், அதிகாரிகளைப்போல விவசாயிகள் வாழ வழி வகுப்பதும்தான். உழுது, விதைத்தறுப்பாருக்கு உணவில்லை என்கிற நிலைமை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்!

Tuesday, April 21, 2009

Privacy Policy for www.yogibala.blogspot.com

If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at yrskbalu@gmail.com.

At www.yogibala.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.yogibala.blogspot.com and how it is used.

Log Files
Like many other Web sites, www.yogibala.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable.

Cookies and Web Beacons
www.yogibala.blogspot.com does use cookies to store information about visitors preferences, record user-specific information on which pages the user access or visit, customize Web page content based on visitors browser type or other information that the visitor sends via their browser.

DoubleClick DART Cookie
.:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.yogibala.blogspot.com.
.:: Google's use of the DART cookie enables it to serve ads to users based on their visit to www.yogibala.blogspot.com and other sites on the Internet.
.:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html

Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include ....
Google Adsense


These third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.yogibala.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see.

www.yogibala.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers.

You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.yogibala.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites.

If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites.

Friday, April 17, 2009

கவலையைக் குறைக்க இரு பட்டியல் - கணேசன்

பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனனிடம் அழகாகக் கூறுவான். "வீண் கவலை காணிட வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ".

திருதராஷ்டிரன் கூறியது போல் கவலைப்படுவதற்கு காரணங்களைப் பட்டியல் இடுவது கஷ்டமான காரியம் அல்ல. நம் ஒவ்வொருவரிடமும் நீளமான பட்டியல் இருக்கவே இருக்கிறது. பட்டியலில் ஒன்று குறையும் போது ஒன்பது சேர்ந்து கொண்டு பட்டியல் மேலும் நீள்கிறது.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது. "உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலை". மனித உடல் உள்ள வரை, மனிதனுக்கு உயிர் உள்ள வரை, அவன் கவலைகளை சேர்த்து கடலில் போட்டால் அந்த கடல் அளவும் போதாதாம். செத்தால் தான் நிம்மதி என்று இந்த வழிச் சிந்தனை சொல்கிறது.

இப்படி இருக்கையில் கவலையைக் குறைக்க அல்லது மறக்க மனிதன் எத்தனையோ முயற்சி செய்கிறான். இந்தக் கவலைக் கடலைக் "குடித்தே" குறைக்க நினைப்பவர்கள் உள்ளனர். வேறெதுவும் குறைக்காது என்பது அவர்கள் வாதம். ஆனால் அந்த வாதம் முட்டாள்தனம். போதை தெளிந்து பார்க்கையிலும் கவலைகள் அப்படியே இருக்கும் (போதையால் பிரச்சினைகள் பெருகாமல் இருந்தால்).

அதிகம் கவலைப்படுபவர்களே! உங்கள் கவலையைக் குறைக்க இரு பட்டியல்கள் தயாரியுங்கள். ஒன்று உங்களிடம் உள்ள நல்லவற்றின் பட்டியல். எத்தனையோ பேருக்குக் கிடைக்காத எத்தனையோ நல்லவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதையெல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

"காலில்லாதவனைப் பார்க்கும் வரை செருப்பில்லை என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறியவனைப் போல எத்தனையோ விஷயங்களில் உங்கள் கவலை அர்த்தமில்லாதது என்பதை உணர்வீர்கள்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு.

ஞானி ஒருவர் தன்னிடம் கவலையுடன் வந்த மனிதனின் அறிவுக் கண்களைத் திறக்க நினைத்தார். "உனக்கு கண்கள் இருக்கின்றன. குருடாக இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார். உனக்குக் காது கேட்கிறது. செவிடாக உள்ள லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார்....." என்று ஆரம்பித்து அவனிடம் உள்ளவற்றின் பட்டியலை எல்லாம் சொல்லி அவை இல்லாமல் இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்க்கச் சொன்னார். கடைசியில் "உனக்கு ஒரு அழகான கார் உள்ளது. வாகனமே இல்லாத லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்" என்று முடித்தார்.

ஆனால் கவலை குறையாத அந்த மனிதன் சோகமாகச் சொன்னான். "ஸ்வாமி! என்னிடம் உள்ள அத்தனையும் என் பக்கத்து வீட்டுக்காரனிடமும் இருக்கின்றன. ஆனால் அவனிடம் கூடுதலாக இன்னொரு காரும் இருக்கிறதே?"

இதற்கு என்ன செய்வது? இவன் பார்வை பக்கத்து வீட்டுக்காரனுடன் நின்று விடுகிறது. குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அடுத்தது இரண்டாவது பட்டியல். உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள், துக்கங்கள் என்னென்ன என்பதையும் அந்தப்பட்டியலில் எழுதுங்கள். ஆரம்பத்தில் இதில் எழுத அதிகம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்தப் பட்டியல் போல் நீளமான ஒரு பட்டியலை நீங்கள் தயார் செய்யவே முடியாது. பட்டியலில் எழுதத் தேவையானவற்றைப் பெற நீங்கள் சில இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் சென்று ஒரு முழு உலா வர வேண்டும். அடுத்து ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். இந்த இரு இடங்களிலும் நோயாளிகளையும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்னென்ன என்று உங்களுக்குப் புரியும்.

மேலே சொன்ன கதையில் கூட அந்த மனிதன் தன்னை விட ஒரு கார் அதிகம் உள்ள பக்கத்து வீட்டுக்காரனை மேலோட்டமாகப் பார்க்காமல் உற்று கவனித்தால் அவனிடம் உள்ள எத்தனையோ குறைபாடுகள், பிரச்சினைகள் தன்னிடம் இல்லை என்பதை உணர முடியும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து உழலும் போது மலையாய் தெரியும் கவலைகள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து கவனிக்கும் போது சிறுத்துப் போகின்றன.

யாருக்கும், என்றைக்கும், உள்ள பிரச்சினைகளை விட இல்லாத பிரச்சினைகளே அதிகம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு கவலைப்படும் நீங்கள் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகளின் பட்டியலையும் எடுத்துப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன், எல்லோருடைய எல்லா பிரச்சினைகளயும் பார்க்கும் போது, அவர்களுடைய துக்கங்களை நேரடியாகக் காணும் போது, உங்கள் கவலைகளில் பல அவற்றின் முன் அர்த்தமில்லாமல் போவதைக் காண்பீர்கள்.

துரியோதனனைப் போல் கவலைப்பட நூறு காரணங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விட ஆயிரம் காரணங்கள் உள்ளன என்பதை இந்த இரண்டு பட்டியல்களும் உங்கள் தலையைக் குட்டிச் சொல்லும்.

தேங்க்ஸ் டு -என்.கணேசன்

Wednesday, April 15, 2009

இந்தியா- உலக நாடுகளின் குப்பை தொட்டியா?

தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஐ.டி .சி. நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நகராட்சிக் கழிவுகளைத் தவறான தகவல் அளித்து இறக்குமதி செய்ய முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நமது துறைமுகப் பொறுப்புக் கழகங்களும், சுங்க இலாகா அதிகாரிகளும், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையும் கவனமாகவும் முனைப்பாகவும் செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம். அவர்களது பார்வையில்படாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கழிவுப் பொருள்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இரண்டு மாதங்களுக்கு முன்புகூட, சென்னைத் துறைமுகத்தில் பழைய பேப்பர் என்று தவறான தகவல் அளித்து சுமார் 150 டன்கள் ஆறு கன்டெய்னர்களில் வந்து இறங்கின. துறைமுக அதிகாரிகளுக்கும், சுங்க இலாகாவினருக்கும் சந்தேகம் ஏற்பட்டதால், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையினரின் உதவியை நாட, அந்த 150 டன்களில் சுமார் 40 சதவீதம் எலக்ட்ரானிக் கழிவுகளும், நகராட்சிக் குப்பைகளும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் திருப்பி அனுப்பப் பரிந்துரை செய்யப்பட்டு, இப்போதும் துறைமுகத்தில் அவை நாற்றமடித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற கழிவுகள், பழைய காகிதம் என்கிற பெயரில்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமான காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. அவை சுமார் 20 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்கின்றன. அதில் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பழைய காகிதத்தில் இருந்துதான் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதையே சாக்காக வைத்து பழைய காகிதத்துடன் நகராட்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளையும் ஏற்றுமதி செய்துவிடுகின்றன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். இப்படிக் குப்பையுடன் இறக்குமதி செய்யும்போது குறைந்த விலைக்குப் பழைய காகிதம் கிடைக்கிறது. இதில் இடைத்தரகர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொழிக்கிறார்கள். இதுபோன்ற குப்பைகளை இறக்குமதி செய்பவர்கள், கண்டுபிடிக்கப்பட்டால் மாயமாக மறைந்து விடுவார்கள். இல்லையென்றால் நீதிமன்றத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு காலம் தாழ்த்தும் உத்தியில் ஈடுபடுவார்கள். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் துறைமுக அதிகாரிகளுக்கோ, சுங்க இலாகாவினருக்கோ, மாசுக் கட்டுப்பாட்டுத் துறைக்கோ முறையாக வரையறுக்கப்படாமல் இருப்பதுதான் காரணம்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் சோதனை இடும் வசதி நமது துறைமுகங்களில் இல்லை. சென்னை போன்ற பெரிய துறைமுகங்களில்கூட, கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் வசதி ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது. கப்பல் மூலம் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகள் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை கடத்தப்படுவதுகூட சாத்தியம்தான். இறக்குமதியாளர்கள் தரும் தகவல் மற்றும் உத்தேசமான பரிசோதனை மூலம் மட்டும்தான் சுங்க இலாகாவினர் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

பயங்கரவாதிகளால் நமது நாடு பலமுறை தாக்கப்பட்ட பிறகும் நமது துறைமுகங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு நமது அரசிடம் ஏற்படாதது வியப்பாக இருக்கிறது. துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை "ஸ்கேன்' செய்யும் வசதிகள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக்கூட ஏன் அரசு உணரவில்லை என்பது தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க, வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து நகராட்சிக் குப்பைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பது அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இப்படிக் குப்பைகளை இறக்குமதி செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தண்டனை அளிக்கும் விதத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதிலும் மத்திய அரசு தயங்குகிறது. "காட்' ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை என்றெல்லாம் கூறும் நமது ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதுபோல இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது குப்பைத் தொட்டிகளாக உபயோகித்துக் கொள்ள மறைமுகமாக அனுமதிக்கிறார்களோ என்கிற சந்தேகம் கூட எழுகிறது. கேட்டால், இதைப் பற்றி நாம் அதிகம் பேசினால், அன்னிய முதலீடு குறைந்துவிடும் என்று பதிலளிக்கிறார்கள்.

இந்தியாவை உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாக்கி விட்டு அன்னிய முதலீடு பெறுவது என்பது கண்களை விற்றுச் சித்திரம் பெறுவது போன்றதல்லவா? எலக்ட்ரானிக் கழிவுகள் மூலம் ஏற்படும் கதிர் வீச்சும், நகராட்சிக் குப்பைகள் மூலம் பரவக்கூடிய விஷக்கிருமிகளும் பல தலைமுறைகளைப் பாதிக்கக் கூடும் என்பது தெரிந்தும் அதைத் தடுக்க நாம் தவறுகிறோமே, இதைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் யாருமே இல்லையா?