Saturday, February 27, 2010

அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்?

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்

ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

thanks to dinamani

Tuesday, February 16, 2010

தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால்

இந்திய மருத்துவக் கழகமும்,​​ சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் பயிற்சி மையமும் இணைந்து மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது பற்றிய ஒரு பயிலரங்கத்தைக் கோவையில் சனிக்கிழமை நடத்தின.​ இதுபோன்ற பயிலரங்கங்களைத் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியமும் நடத்தி வருகிறது.

நாளும் பெருகிவரும் மருத்துவமனைகளும்,​​ ரத்தப் பரிசோதனைச் சாலைகளும் தொற்று நோய்களைப் பரவச் செய்யும் பல மருத்துவக் கழிவுகளையும்,​​ உயிரிக் கழிவுகளையும் அன்றாடம் வெளியேற்றுகின்றன.​ இவை தகுந்த முறையில் தரம் பிரிக்கப்பட்டு,​​ அந்தந்தக் கழிவுகளின் தன்மைக்கேற்ப அழிக்கப்பட வேண்டும்.​ ஆனால்,​​ குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருவது தொடர்கிறது.

ஒரு மருத்துவமனையில் அன்றாடம் ஏற்படும் கழிவுகளில் 80 சதவிகிதம் குப்பை கூளங்களின் ரகத்தைச் சேர்ந்தவைதான்.​ ஏனைய 20 சதவிகிதம் மிகவும் ஆபத்தான உயிரிக் கழிவுகள்.​ இவை சரியான முறையில் கையாளப்பட்டு அழிக்கப்படாவிட்டால் அதன் நச்சுத்தன்மையும்,​​ கிருமித்தன்மையும் தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையன.​ உதாரணத்துக்கு,​​ பயன்பாடு முடிந்த ஊசிகளை எடுத்துக்கொண்டால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியவை.​ இப்போது மண்ணுக்குள் புதைப்பதுடன் நிறுத்தி விடுகிறோம்.

மருத்துவக் கழிவுகளை வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட குப்பைத் தொட்டிகளில் போட்டு இனம் பிரிக்க வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் கழகத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது.​ இதை முறையாகச் செயல்படுத்த வேண்டிய கடமை செவிலியர்களைச் சாரும்.​ பல்வேறு இக்கட்டான அவசர வேலைகளால் செவிலியர்கள் இந்த வரைமுறையைப் பின்பற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டை அந்தப் பயிலரங்கத்தில் சிலர் முன்வைத்ததில் உண்மை இல்லாமல் இல்லை.​ பழக்கம் மட்டுமே இந்தக் குறைபாட்டை நீக்கவல்ல மருந்து.

மருத்துவக் கழிவுகள் என்பது மேலோட்டமாகப் பிரித்தால் மூன்று வகைப்படும்.​ பேண்டேஜ்,​​ பஞ்சு,​​ மருந்துக் குப்பிகள்,​​ அட்டைப் பெட்டிகள்,​​ பிளாஸ்டிக் சிரிஞ்சுகள்,​​ உபகரணங்கள் போன்ற திடப்பொருள்கள் ஒருவகை.​ திரவப் பொருள்கள் இன்னொரு வகை.​ இந்த இரண்டையும்விட ஆபத்தான மூன்றாவது வகையைச் சேர்ந்தவை,​​ பரிசோதனைச் சாலை மற்றும் அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் கழிவுகள்.

இந்தியா முழுவதுமாக எடுத்துக் கொண்டால் நாளொன்றுக்கு சுமார் 408.60 டன் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.​ இந்தியாவின் மொத்த தினசரி மருத்துவக் கழிவுகளில் 294.75 டன்கள் மட்டுமே முறையாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அழிக்கப்படுகின்றன.

மருத்துவக் கழிவுகளைக் கையாள விஞ்ஞான ரீதியாக அமைந்த கழிவு அழிப்பு நிலையங்கள் இந்தியாவில் 50 மட்டுமே.​ தமிழகத்தில் 13.​ இந்த நிலையங்களின் எண்ணிக்கை குறைந்தது நான்கு மடங்காவது அதிகரிக்கப்படாவிட்டால்,​​ தொற்றுநோய்கள் பரவுவதையும்,​​ உயிரிக்கழிவின் நச்சு மண்ணில் கலப்பதையும் தடுத்து நிறுத்துவது கடினம்.​ மருத்துவக் கழிவுகள் மண்ணில் கலப்பதும்,​​ ஓடைகள் மூலம் ஆறுகளில் கலப்பதும் நிலத்தடி நீரையும்,​​ குடிநீரையும் மாசுபடுத்துவதுடன் அபாயகரமான சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால்,​​ எல்லா மருத்துவமனைகளும்,​​ கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பதுதான்.​ வெவ்வேறு நிறத்திலான குப்பைத் தொட்டிகளில் இனம் பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு,​​ முறையான பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி இதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவுகளைக் கையாளும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கவோ,​​ புதைக்கவோ செய்வதுதான் மருத்துவக் கழக விதி.​ ஆனால்,​​ 30 சதவிகிதம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

உலக வங்கி,மருத்துவக் கழிவுகளைச் சேகரித்து முறையாகக் கையாள்வதற்காகத் தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாகத் தெரிகிறது.​ மருத்துவக் கழிவுகளைக் கையாள இப்போது இருக்கும் 13 நிலையங்கள் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

அரசும் மருத்துவமனைகளும் இந்தப் பிரச்னையில் விழிப்பாக இருக்கிறதோ இல்லையோ பொதுமக்கள் விழிப்பாகச் செயல்பட்டு,​​ மருத்துவக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதித்து சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும்.​ நோய்கள் பரவினால் பாதிக்கப்படுவதும்,​​ அவதிப்படுவதும் நாம்தான்.​ அரசுக்குத் தேவை கடமையுணர்வும்,​​ சுறுசுறுப்பும்.​ பொதுமக்களுக்குத் தேவை அக்கறையும் விழிப்புணர்வும்!

thanks to dinamani

பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிநிறுவனம்.​

எல்லா மாநிலங்களிலும் பரவலாக எதிர்ப்பு தோன்றியதையடுத்து,​​ குறிப்பாக இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டங்களில் காணப்பட்ட ஏகோபித்த எதிர்ப்பைக் கண்டு,​​ மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை அறிமுகம் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.​ இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம் என்ற சொல்லத் துணிவில்லாமல்,​​ தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கும் வேளாண் தொழில்துறையினருக்கும் ஏற்புடைய வகையில் அறிவியல் உண்மைகள் நிறுவப்படும் வரை,​​ சுற்றுச்சூழலுக்கும் மனித உடலுக்கும் தீமை விளைவிக்காது என்பதை ​ நீண்டகாலச் சோதனைகள் நடத்தி முடிவுகள் காணப்படும்வரை இந்த பி.டி.​ கத்தரிக்காயை நிறுத்தி வைப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.​ ​

இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இத்தனை நாள்களாக விவசாயிகள் போராடி வந்தனர்.​ ஆனாலும்,​​ அதே காரணங்களை அரசே தன் வாயால் சொல்லி,​​ நிறுத்தி வைப்பதுதானே அரசின் வழக்கம்.​ அந்த வழிவழி வந்த நடைமுறை மாறாமல்,​​ ஏதோ தாங்களாகவே நிறுத்தி வைப்பதைப்போல பி.டி.கத்தரிக்காயை மூட்டை கட்டி வைக்கத் தீர்மானித்தார்கள்.​ கடைசியாக,​​ இப்போதாகிலும் இத்தகைய நல்ல முடிவு எடுத்தார்களே என்பதற்காக மத்திய அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பி.டி. ​ கத்தரிக்காய் தடை செய்ததில் வெற்றி அடைந்த களிப்பில் இன்னும் சில கடமைகளை வேளாண் போராளிகள் மறந்துவிடக்கூடாது.​ இந்தியாவில்,​​ கத்தரிக்காய் போன்று 46 வகை உணவுத் தாவரங்களுக்கு இத்தகைய மரபீனி மாற்று வடிவங்கள் சோதனை அடிப்படையில்,​​ ​ வளர்க்கப்பட்டு வருகின்றன.​ இவையும் மெல்லமெல்ல தலைகாட்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.​ இவற்றில் கத்தரிக்காய்போல,​​ அனைவராலும் உண்ணப்படும் முக்கிய பயிரான நெல் ரகமும் இருக்கிறது.

கத்தரிக்காய் மீதான எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால்,​​ சற்றே கிடப்பில் போடப்பட்ட மரபீனி மாற்று நெல் ரகங்கள் தற்போது வேறு வடிவம் கொள்ளவும்,​​ அவற்றை வீரிய ரகங்களாகச் சந்தைக்குள் கொண்டுவரவும் புதியபுதிய உத்திகளைக் கையாளுவார்கள் என்று சொல்லப்படுகிறது.​ இவை வீரிய ரகங்களாகச் ​ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால்,​​ அவற்றை பிரித்தறியும் திறன் நம்மில் பலருக்கும் கிடையாது.​ ஆகவே,​​ வேளாண் போராளிகள் இத்தகைய மரபீனி மாற்று ஆய்வுக்காக களத்தில் சாகுபடி நிலையில் உள்ள அனைத்துப் பயிர்களையும் கண்டறிந்து அத்தகைய சோதனை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பி.டி. ​ கத்தரிக்காய் எதிர்ப்பு வெற்றியில் முடிந்ததற்கு காரணம்,​​ இதை அனைவரும் சாப்பிடுகிறோம் என்பதுடன் இப்பயிர் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது என்பதும்தான்.​ கத்தரிக்காய் அல்லாமல்,​​ சில மாநிலங்கள் மட்டுமே விளைவிக்கும் சில வகை உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக முழுமையான எதிர்ப்புத் தோன்றியிருக்காது.​ சில மாநிலங்களில் மட்டும் எதிர்ப்பு எழுந்து,​​ பிசுபிசுத்துப் போயிருக்கும்.

இத்தகைய குளறுபடிகள் அனைத்துக்கும் அரசையும் இதற்கான பொறுப்பு வகிக்கும் ஆட்சியாளர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.​ இந்தக் குளறுபடிக்கு மிகப்பெரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்களும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

பி.டி.​ கத்தரிக்காய் அறிமுகம்,​​ சாகுபடி இவற்றுக்கு மூல ஆதார நிறுவனம் மான்சாண்டோ.​ இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்கோ மூலமாகத்தான் இந்தியாவில் பி.டி,​​ கத்தரிக்காய் எடுத்துக்கொள்ளப்பட்டது.​ இது எந்த வித ஆபத்தையும் விளைவிக்காது என்று பரிந்துரை செய்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.​ ​

இந்திய ஆட்சியாளர்களைவிட,​​ இந்திய ஆராய்ச்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதில் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான்,​​ இத்தகைய தேவையற்ற மரபீனி மாற்று உணவுப் பொருள்கள் இந்தியாவுக்குள் நுழையக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள்,​​ இந்திய வேளாண் ஆராய்ச்சிக் ​ கழகம் ஆகியவற்றின் பல ஆராய்ச்சிகளுக்கு நிதிநல்கை பெருந்தகையாளர்களாக மான்சாண்டோ,​​ ஃபோர்டு போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.​ இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதோடு,​​ ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெறும் களப்பணிக்கு,​​ நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா,​​ அமெரிக்கா போன்ற நாடுகளைக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்லவும் செய்கிறார்கள்.​ இந்த ஆராய்ச்சியாளர்கள்தான் அரசு மற்றும் பல்கலைக்கழகப் பணிகளில் உயர் பதவிக்கு வருபவர்களும்!​ பழைய நட்பு புதுப்பிக்கப்படுகிறது.​ அன்பினால் நெருக்கடி தந்து,​​ ​ தங்களுக்குச் சாதகமான மரபீனி மாற்றுப் பயிர்களை இந்தியச் சந்தையில் நுழைக்கும் அனைத்து கருத்துருக்களையும் தயாரிக்க வைக்கிறார்கள்.​ பிறகுதான் ஆட்சியாளர்களை மயக்கும் வித்தையை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கையில் எடுக்கின்றன.

இந்த நிலைமை ஏற்படக் காரணம் இந்திய அரசு,​​ வேளாண் ஆராய்ச்சிகளுக்கு போதிய ஆர்வம் காட்டாமல்,​​ போதிய நிதி ஒதுக்காமல்,​​ இவ்வாறாக அன்னிய நிதிநல்கைகளைப் பெற்றுக்கொள்வதை அனுமதிப்பதுதான் என்றால் அது மிகையாகாது.​ இந்திய அரசுப் பணத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தவும்,​​ பன்னாட்டு நிதிநிறுவனம்,​​ அல்லது அத்தகைய தொடர்புகள் உள்ள நிறுவனங்களின் நிதிநல்கையைத் தவிர்ப்பதும் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ​ முழுக்க முழுக்க இந்தியத்தன்மையோடு நிலைத்து நிற்க நிச்சயம் உதவியாக இருக்கும்.


thanks to dinamani