Tuesday, February 16, 2010

தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால்

இந்திய மருத்துவக் கழகமும்,​​ சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் பயிற்சி மையமும் இணைந்து மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது பற்றிய ஒரு பயிலரங்கத்தைக் கோவையில் சனிக்கிழமை நடத்தின.​ இதுபோன்ற பயிலரங்கங்களைத் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியமும் நடத்தி வருகிறது.

நாளும் பெருகிவரும் மருத்துவமனைகளும்,​​ ரத்தப் பரிசோதனைச் சாலைகளும் தொற்று நோய்களைப் பரவச் செய்யும் பல மருத்துவக் கழிவுகளையும்,​​ உயிரிக் கழிவுகளையும் அன்றாடம் வெளியேற்றுகின்றன.​ இவை தகுந்த முறையில் தரம் பிரிக்கப்பட்டு,​​ அந்தந்தக் கழிவுகளின் தன்மைக்கேற்ப அழிக்கப்பட வேண்டும்.​ ஆனால்,​​ குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருவது தொடர்கிறது.

ஒரு மருத்துவமனையில் அன்றாடம் ஏற்படும் கழிவுகளில் 80 சதவிகிதம் குப்பை கூளங்களின் ரகத்தைச் சேர்ந்தவைதான்.​ ஏனைய 20 சதவிகிதம் மிகவும் ஆபத்தான உயிரிக் கழிவுகள்.​ இவை சரியான முறையில் கையாளப்பட்டு அழிக்கப்படாவிட்டால் அதன் நச்சுத்தன்மையும்,​​ கிருமித்தன்மையும் தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையன.​ உதாரணத்துக்கு,​​ பயன்பாடு முடிந்த ஊசிகளை எடுத்துக்கொண்டால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியவை.​ இப்போது மண்ணுக்குள் புதைப்பதுடன் நிறுத்தி விடுகிறோம்.

மருத்துவக் கழிவுகளை வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட குப்பைத் தொட்டிகளில் போட்டு இனம் பிரிக்க வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் கழகத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது.​ இதை முறையாகச் செயல்படுத்த வேண்டிய கடமை செவிலியர்களைச் சாரும்.​ பல்வேறு இக்கட்டான அவசர வேலைகளால் செவிலியர்கள் இந்த வரைமுறையைப் பின்பற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டை அந்தப் பயிலரங்கத்தில் சிலர் முன்வைத்ததில் உண்மை இல்லாமல் இல்லை.​ பழக்கம் மட்டுமே இந்தக் குறைபாட்டை நீக்கவல்ல மருந்து.

மருத்துவக் கழிவுகள் என்பது மேலோட்டமாகப் பிரித்தால் மூன்று வகைப்படும்.​ பேண்டேஜ்,​​ பஞ்சு,​​ மருந்துக் குப்பிகள்,​​ அட்டைப் பெட்டிகள்,​​ பிளாஸ்டிக் சிரிஞ்சுகள்,​​ உபகரணங்கள் போன்ற திடப்பொருள்கள் ஒருவகை.​ திரவப் பொருள்கள் இன்னொரு வகை.​ இந்த இரண்டையும்விட ஆபத்தான மூன்றாவது வகையைச் சேர்ந்தவை,​​ பரிசோதனைச் சாலை மற்றும் அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் கழிவுகள்.

இந்தியா முழுவதுமாக எடுத்துக் கொண்டால் நாளொன்றுக்கு சுமார் 408.60 டன் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.​ இந்தியாவின் மொத்த தினசரி மருத்துவக் கழிவுகளில் 294.75 டன்கள் மட்டுமே முறையாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அழிக்கப்படுகின்றன.

மருத்துவக் கழிவுகளைக் கையாள விஞ்ஞான ரீதியாக அமைந்த கழிவு அழிப்பு நிலையங்கள் இந்தியாவில் 50 மட்டுமே.​ தமிழகத்தில் 13.​ இந்த நிலையங்களின் எண்ணிக்கை குறைந்தது நான்கு மடங்காவது அதிகரிக்கப்படாவிட்டால்,​​ தொற்றுநோய்கள் பரவுவதையும்,​​ உயிரிக்கழிவின் நச்சு மண்ணில் கலப்பதையும் தடுத்து நிறுத்துவது கடினம்.​ மருத்துவக் கழிவுகள் மண்ணில் கலப்பதும்,​​ ஓடைகள் மூலம் ஆறுகளில் கலப்பதும் நிலத்தடி நீரையும்,​​ குடிநீரையும் மாசுபடுத்துவதுடன் அபாயகரமான சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால்,​​ எல்லா மருத்துவமனைகளும்,​​ கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பதுதான்.​ வெவ்வேறு நிறத்திலான குப்பைத் தொட்டிகளில் இனம் பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு,​​ முறையான பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி இதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவுகளைக் கையாளும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கவோ,​​ புதைக்கவோ செய்வதுதான் மருத்துவக் கழக விதி.​ ஆனால்,​​ 30 சதவிகிதம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

உலக வங்கி,மருத்துவக் கழிவுகளைச் சேகரித்து முறையாகக் கையாள்வதற்காகத் தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாகத் தெரிகிறது.​ மருத்துவக் கழிவுகளைக் கையாள இப்போது இருக்கும் 13 நிலையங்கள் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

அரசும் மருத்துவமனைகளும் இந்தப் பிரச்னையில் விழிப்பாக இருக்கிறதோ இல்லையோ பொதுமக்கள் விழிப்பாகச் செயல்பட்டு,​​ மருத்துவக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதித்து சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும்.​ நோய்கள் பரவினால் பாதிக்கப்படுவதும்,​​ அவதிப்படுவதும் நாம்தான்.​ அரசுக்குத் தேவை கடமையுணர்வும்,​​ சுறுசுறுப்பும்.​ பொதுமக்களுக்குத் தேவை அக்கறையும் விழிப்புணர்வும்!

thanks to dinamani

No comments:

Post a Comment