Tuesday, May 26, 2009

வாழ்க்கையில் ஒரு சவால்

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

தேங்க்ஸ் - என்.கணேசன்.

No comments:

Post a Comment